தனலட்சுமிக்கு என்ன தான் ஆச்சு? இருந்தாலும் இவ்வளவு கோபம் கூடாது: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 32 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் கடந்த இரு வாரங்களாக போட்டியாளர் தனலட்சுமி நடந்து கொள்ளும் விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன பிரச்சினைகளுக்குக் கூட தனலட்சுமி கோபத்தில் பேசும் வார்த்தைகள் பார்வையாளர்களையே அதிர்ச்சியடைய வைக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறிவிட்டனர். இதனையடுத்து மற்ற பிக் பாஸ் ஹவுஸ் மேட்டுகளுக்கு இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, மணிகண்டன், விக்ரமன், ஏடிகே, அமுதவாணன், மைனா நந்தினி, ஆயிஷா ஆகியோரின் நடவடிக்கைகள் பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் கண்காணிக்கப்படுகின்றன. இதனால் ஆட்டம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது.

பிபி ஏற்றும் தனலட்சுமி
முதல் இரண்டு வாரங்கள் அசீம் தேவையில்லாமல் சக போட்டியாளர்களுடன் சண்டை போட்டு சர்ச்சைக்குள்ளானார். அதன் பின்னர் அவர் கமலிடம் குட்டு வாங்கியதோடு, அசல் கோளாறு உடன் எவிக்சன் வரை சென்று தப்பி பிழைத்தார். இதனால் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் அசீம், அவ்வப்போது யாரிடமாவது சண்டைப் போட்டு வருகிறார். ஆனால், இந்த விஷயத்தில் அசீமையும் ஓவர்டேக் செய்துவிட்டார் தனலட்சுமி என ரசிகர்கள் இப்போது சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி மீது தப்பில்லை என்றாலும், அவர் நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல், சென்ற வாரம் நடைபெற்ற டிஆர்பி நிகழ்ச்சியிலும் தனலட்சுமி எதற்கெடுத்தாலும் கோபத்தில் கத்திக்கொண்டே இருந்தார்.

மணிகண்டனுடன் சண்டை
அதனால், சென்ற வாரம் அகம் டிவி வழியே பேசிய கமல், தனலட்சுமியின் கோபம் குறித்து ஸ்பெஷல் கிளாஸ் எடுத்து பொறுமையாக இருக்கும்படி அறிவுரை வழங்கினார். ஆனால், அதையெல்லாம் கொஞ்சம் கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த வாரம் நடைபெற்று வரும் ஃபேக்டரி டாஸ்க்கில் மணிகண்டனும் தனலட்சுமியும், பயங்கரமாக மோதிக் கொண்டனர். அதுவும் மணிகண்டனை ஒருமையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு இன்னும் சர்சையாகியுள்ளது. வயதுக்கு மரியாதை இல்லாமல் தனலட்சுமி பேசியதாக மணிகண்டன் பொங்கிவிட்டார். ஆனாலும், போட்டி முடிந்ததும் மணிகண்டனே தனலட்சுமியிடம் சென்று பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டார்.

நெட்டிசன்கள் விளாசல்
தனலட்சுமி தொடர்ந்து யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசி வருவதை நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர். கடந்த இரு வாரங்கலாக அசீமிடம் பயங்கரமாக சண்டைப் போட்ட தனலட்சுமி, இந்த வாரம் மணிகண்டன், விக்ரம் ஆகியோருடன் மோதி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் அமுதவாணன், ஜனனி, குயின்ஸ் ஆகியோரிடம் தனியாக பேசும் போது, அசீம், மணிகண்டன், விக்ரமன் பற்றி எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறார். சில நேரங்களில் அவரின் கோபம் நியாயமானதாக இருந்தாலும், பயங்கரமாக கத்துவது தனலட்சுமிக்கு பெரிய மைனசாக மாறிவிடுகிறது. இனி இந்த வாரம் இறுதியில் கமல் என்ன பஞ்சாயத்து நடத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











