அவர்களை மன்னித்துவிடுங்கள் அப்பா: கஸ்தூரி ராஜாவிடம் கூறிய தனுஷ்
சென்னை: மீனாட்சி, சுந்தரேசன் தம்பதியை மன்னித்துவிடுங்கள் அப்பா என்று தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மீனாட்சி, சுந்தரேசன் தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இது குறித்து தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா கூறியிருப்பதாவது,

வழக்கு
இந்த வழக்கு ஆதாரமற்றது என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அதனால் வழக்கு பற்றி ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு கவலை இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைதியாக இருந்தோம்.

உண்மை
உலகிற்கு உண்மை தெரியும். அதற்கு நீதிமன்ற தீர்ப்பு ஒரு ஆதாரம். மேலும் வெங்கடேச பிரபு என்ற பெயரை தனுஷாக மாற்றிய கெசட் பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.

வரம்பு
அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படுவதற்கு ஒரு அளவு உண்டு. அவர்களின் ஆசை எல்லை கடந்தது. தனுஷ் நீதிமன்றத்தில் நின்றதை பார்த்தபோது கவலையாக இருந்தது.

மன்னித்துவிடுங்கள்
எந்த தப்பும் செய்யாமல் தனுஷ் இதை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த வழக்கு விஷயத்தில் அவர்களை(தம்பதி) மன்னித்துவிடுங்கள் அப்பா என்றார். தற்போதும் அதையே தான் கூறுகிறார்.

பலம்
எங்களின் பிள்ளைகள் தான் எங்கள் பலம். அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றாலும் நாங்கள் தான் ஜெயிப்போம். ஜூன் 2002ம் ஆண்டு அவர்களின் மகன் மாயமானதாக தெரிவித்தார்கள்.

துள்ளுவதோ இளமை
தனுஷின் துள்ளுவதோ இளமை படத்திற்கு 2002ம் ஆண்டு மார்ச் மாதம் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. அந்த படம் 2002ம் ஆண்டு மே மாதம் ரிலீஸாகி அவர் பிரபலம் ஆனார் என்றார் கஸ்தூரி ராஜா.


Click it and Unblock the Notifications











