தனுஷ் எங்கள் மகனே, 'டிஎன்ஏ' சோதனைக்கு நாங்க ரெடி: திருப்புவனம் தம்பதி பொளேர்
மதுரை: தனுஷ் எங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு தயார் என திருப்புவனத்தை சேர்ந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் தங்களின் மகன் கலையரசன் என திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்தனர். இதை தனுஷும், அவரது தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர்.
இந்நிலையில் அந்த தம்பதி தனுஷ் தங்களின் மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். தனுஷ் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கூறி கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கில் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மேலூர் நீதிமன்றம் தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கலையரசன்
எங்களுக்கு கலையரசன் என்ற மகனும், தனபாக்கியம் என்ற மகளும் உள்ளனர். மூத்த மகனான கலையரசன் 7.11.1985ல் மதுரையில் பிறந்தார். பிளஸ் 1 படிக்கும் போது காணாமல் போய்விட்டார்.

தனுஷ்
காணாமல் போன எங்கள் மகனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் சென்னையில் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாக தெரிந்து அவரை சந்திக்க சென்றோம்.

கஸ்தூரி ராஜா
எங்கள் மகனை பார்க்க பல முறை சென்றும் இயக்குனர் கஸ்தூரி ராஜா எங்களை விரட்டியடித்தார். தனுஷ் பெரிய உயரத்தை அடைந்துவிட்டார். அவரை எங்களுடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்த மாட்டோம்.

ஜீவனாம்சம்
வயதான காலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு தனுஷ் ஜீவனாம்சம் கொடுத்தால் போதும். 15 ஆண்டுகளாக எங்களுடன் இருந்த அவர் எங்களை மறந்திருக்க வாய்ப்பு இல்லை.

மரபணு சோதனை
தனுஷ் விவகாரத்தை முறைப்படி நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம். தனுஷ் எங்கள் மகன் என்பதை நிரூபிக்க மரபணு உள்ளிட்ட எந்த சோதனைகளுக்கும் நாங்கள் தயார். தனுஷின் சிறுவயது புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.
நோட்டீஸ்
தனுஷுக்கு அனுப்பப்பட்ட சம்மன் கிழிந்த நிலையில் திரும்பி வந்துள்ளது என்றும், கதிரேசனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அவரது வழக்கறிஞர் டைட்டஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











