மீண்டும் இயக்குநராகும் தனுஷ்... சன் பிக்சர்ஸுடன் மெகா கூட்டணி… அது சரி ஹீரோ யாரு?
சென்னை: தனுஷின் நானே வருவேன் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
2017ம் ஆண்டு ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ்.
இந்நிலையில், தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் படங்களில் பிஸியாக இருக்கும் தனுஷ், மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாத்தி, கேப்டன் மில்லர்
தனுஷின் நடிப்பில் இந்தாண்டு 'தி கிரே மேன்', 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' ஆகிய படங்கள் வெளியாகின. இதனையடுத்து வாத்தி, கேப்டன் மில்லர் படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இதில், தமிழ், தெலுங்கில் உருவாகும் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கேப்டன் மில்லர் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சேகர் கம்முளா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் தனுஷ் கமிட் ஆகியுள்ளார்.

மீண்டும் இயக்குநர்
இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநராக முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே 2017ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார் தனுஷ். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ராஜ்கிரன் - ரேவதி இருவரின் காதல் காட்சிகளை பின்னணியாக வைத்து முதிர்ச்சியான ஒரு படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். இந்தப் படத்தின் கதைக்களமும் வசனங்களும் தனுஷை ஒரு இயக்குநராகவும் கவனிக்க வைத்தது. இந்நிலையில், தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்க ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்
நீண்ட நாட்களாகவே இரண்டாவது படத்திற்கான கதை ரெடியாகிவிட்டதாக தனுஷ் கூறிவந்தார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'நானே வருவேன்' படத்தின் கதை கூட தனுஷ் எழுதியதே. இந்நிலையில், தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பவர் பாண்டி போல அல்லாமல் கொஞ்சம் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், இந்தப் படத்தின் ஹீரோ யார்? எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்ற எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இளன் இயக்கத்தில் தனுஷ்
பவர் பாண்டி மூலம் இயக்குநராகவும் பாராட்டுகளைப் பெற்ற தனுஷ், அவரது இரண்டாவது படத்திலும் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும், இதுகுறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத தனுஷின் நானே வருவேன், ஓடிடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











