இப்பவும் டென்ஷன்.. அவ மேல்தான் தப்பு.. நான் இல்ல.. தாய் மடியில் கதறி அழுத தனுஷ்.. ரகசியம் உடைத்த தந்தை
சென்னை: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. குறிப்பாக இயக்குநர் தனுஷிடமிருந்து அட்டகாசமான ஒரு ஃபீல்குட் திரைப்படம் வந்திருப்பதாகவும் பலர் சொல்கிறார்கள். இந்நிலையில் தனுஷின் தந்தை மனம் உருகி பல விஷயங்களை ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
பா.நீலகண்டன், கேஎஸ் கோபாலகிருஷ்ணன், விசு உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக மாறியவர் கஸ்தூரி ராஜா. ராஜ்கிரணை வைத்து படம் இயக்கி டைரக்டர் அவதாரம் எடுத்த அவருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். தனது வாரிசுகள் சினிமாவுக்கு வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவர்களை படிக்க வைத்துக்கொண்டிருந்த கஸ்தூரி ராஜாவுக்கு வேறு வழியே இல்லாமல் மகன்களை சினிமாவுக்குள் கொண்டுவரும் சூழல் உருவாகிவிட்டது.
பெயர் பெற்ற பிள்ளைகள்: தான் எழுதிய நாவலை தழுவி துள்ளுவதோ இளமை படத்தை ஆரம்பித்தார். தனுஷை ஹீரோவாக அறிமுகமாக்கினார். 70 சதவீத படப்பிடிப்பை முடித்த அவர்; பாக்கி வேலைகளை தனது மூத்த மகன் செல்வராகவனிடம் கொடுக்க ஒரே படத்தில் மூத்த மகனை இயக்குராகவும், இளைய மகனை நடிகராகவும் ஆக்கினார். அப்படத்துக்கு பிறகு செல்வா இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டே மெகா ஹிட்டானதும்; பிறகு அவர்கள் இரண்டு பேரும் பெரிய அடையாளமாக மாறியிருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்தது.

இட்லி கடை: நடிகராக மட்டும் கலக்கிவந்த தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தில் இயக்குநராக மாறினார். அப்படம் சூப்பர் ஹிட். தொடர்ந்து ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கி சூடு போட்டுக்கொண்ட அவர்; இப்போது இட்லி கடை படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண் என பலர் நடித்திருக்கிறார்கள்.
ஃபீல் குட் படம்: படமானது நேற்று முன்தினம் வெளியானது. ஆர்வத்தோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு திருப்தியைத்தான் படம் கொடுத்திருக்கிறது. ரிலீஸான முதல் நாளே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை இட்லி கடை பதிவு செய்துவிட்டது. விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்தான். இந்நிலையில் இயக்குநரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா தனியார் யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
கஸ்தூரி ராஜாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "எனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களும் நன்றாக படித்தார்கள். நான் எழுதிய ஒரு கதையை படமாக்க வேண்டும் என்று செல்வராகவன் கூறினார். ஹீரோவாக நடிப்பதற்கு உதய் கிரண் என்ற நடிகர் கமிட்டானார். பிறகு அவர் சில காரணங்களால் படத்திலிருந்து விலகிவிட்டார்.
கதறி அழுத தனுஷ்: அதற்கு பிறகு தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்தோம். அவருக்கு சுத்தமாக ஆர்வமே இல்லை. எப்படியோ அவரை சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்துவிட்டோம். அந்தப் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். செல்வாவை பொறுத்தவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபமாகத்தான் இருப்பார். யார் தவறு செய்தாலும் தனுஷைத்தான் திட்டுவார்.
வீட்டுக்கு வந்ததும் தனுஷ் அவரது அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு, 'எனக்கு சினிமாவே வேண்டாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவள் மட்டுமின்றி யார் தவறு செய்தாலும் என்னைத்தான் திட்டுகிறார்' என அழுதபடி சொல்வார். சினிமா எவ்வளவு வசதி வாய்ப்பை பெற்றாலும் பெரிய வலிதான். இப்போ இட்லி கடை படம் ரிலீஸாகியிருக்கு. ஆனால் இவ்வளவு பெயர் வாங்கிய பிறகும் பட ரிலீஸ் அன்று டென்ஷனோடுதான் வீட்டில் உட்கார்ந்திருக்கிறான்" என்றார்.


Click it and Unblock the Notifications











