தடை கேட்ட மனுவைத் தள்ளுபடி செய்த கோர்ட்...சிக்கலின்றி வெளியானது சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு'!
சென்னை: சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு' படத்துக்கு தடை கேட்டுத் தொடர்ந்த மனுவை சிவில் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் தில்லுக்குத் துட்டு. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்‘ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்‘ நிறுவனம் சார்பில் தாக்கல் செயப்பட்ட மனுவில் ''எங்கள் நிறுவனம் ‘ஆவி பறக்க ஒரு கதை‘ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்து, பெரும் தொகையை செலவு செய்தது.
இந்த படத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட ராம்பாலா என்பவர், இந்த படத்தை எடுப்பதற்கு காலதாமதம் செய்தார். மேலும் இந்த படத்தின் கதையை ‘தில்லுக்கு துட்டு‘ என்ற பெயரில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு, ராம்பாலா இயக்கியுள்ளார்.
இதில் நடிகர் சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அதனால், படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும்‘' என்று கூறப்பட்டு இருந்தது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 'தில்லுக்குத் துட்டு' படத்தை இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், ராம்பாலா, சந்தானம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ‘தில்லுக்கு துட்டு‘ படத்துக்கு தடைகேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் எந்த சிக்கலுமின்றி 'தில்லுக்குத் துட்டு' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











