முடிவெடுத்தால் முதல்வர்... தமிழ்நாட்டிற்கா? புதுச்சேரிக்கா?...முடிவெடுத்து விட்டாரா விஜய்?
சென்னை : முடிவெடுத்தால் முதல்வர் என சமீபத்தில் மதுரையில் விஜய் மக்கள் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது வெறும் மாஸ் காட்ட ஒட்டப்பட்ட போஸ்டர் என்று நினைத்தால், விஜய்யின் அரசியல் கணக்கை சூசகமாக சொல்லத்தான் இந்த டயலாக் சொல்லப்பட்டுள்ளது என்பது உறுதியாகி வருகிறது.
விஜய்யின் படங்கள் ஒரு புறம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்றால், மற்றொரு புறம் அவர் அரசியல் பிரவேசத்திற்கான அஸ்திவாரத்தை பலமாக அமைத்து வருவது அரசியல் புள்ளிகள் பலருக்கும் அல்லு விட வைத்துள்ளது. நடிகர் என்ற மாசை காட்டி அரசியலுக்கு வந்து ஜெயித்து காட்ட விஜய் என்ன எம்ஜிஆரா அல்லது ஜெயலலிதாவா என கேட்டவர்கள் இன்று வாயடைத்து போய் உள்ளனர்.

அரசியல் அடித்தளம்
அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் பிள்ளையார்சுழி போடப்பட்ட, விஜய் மக்கள் இயக்கத்தில் சத்தமே இல்லாமல் ஸ்டிராங் ஆக்கி வருகிறார் விஜய். தமிழகத்தில் விஜய், தனது அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் அமைத்து விட்டார் என்பதை காட்டி விட்டார் விஜய். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் கணிசமான இடங்களை பிடித்து, அனைவரையும் மிரள வைத்து விட்டார்.

முடிவெடுத்தால் முதல்வர்
இது போதாதென்று சமீபத்தில் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரை சந்தித்தது, அதற்கு பிறகு மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் என தமிழக அரசியலில் சலசலப்பையே ஏற்படுத்தி விட்டார் விஜய். முடிவெடுத்தால் முதல்வர் என்று மட்டுமா சொன்னார்கள் விஜய் ரசிகர்கள். 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரே விஜய் தான் என சொல்லி விட்டார்கள். இது இன்னும் சூடேற்றி உள்ளது.

முடிவெடுத்து விட்டாரா விஜய்
இதனால் அடுத்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க தான் விஜய் கணக்கு போட்டு காய் நகர்த்துகிறார் என்று பார்த்தால், வரிசையாக படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும் ரகசியமாக சென்று சந்தித்து விட்டு வந்துள்ளார் விஜய். இதனால் விஜய் அரசியல் பிரவேசத்திற்கு முடிவெடுத்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கா? புதுச்சேரிக்கா?
ஆனால் புதுச்சேரி முதல்வருடனான சந்திப்பு, புதுச்சேரியில் ஒட்டப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் போஸ்டரில் ரங்கசாமியின் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளதை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் விஜய் முதல்வராக முடிவெடுத்திருப்பது தமிழ்நாட்டிலா, புதுச்சேரியிலா என கேட்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி அரசியல் வட்டாரத்திலும் இந்த கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











