விவாகரத்து வழக்கு.. கண்ணீருடன் வெளியேறிய மஞ்சு வாரியர்... ஜனவரியில் விசாரணை!
எர்ணாகுளம்: மலையாள நடிகர் திலீப் - மஞ்சு வாரியார் விவாகரத்து வழக்கு வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கேரள நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கை தாக்கல் செய்ய எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்துக்கு வந்த மஞ்சு வாரியார், முதல் கட்ட ஆலோசனை முடிவில் கண்ணீருடன் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் திலீப்- மஞ்சு வாரியர். இருவரும் புகழின் உச்சத்தில் இருக்கும் போது 1998-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு மீனாட்சி என்ற 14 வயது மகள் உள்ளார். திருமணமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மஞ்சு வாரியரால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் எனவே தனக்கு விவாகரத்து வேண்டும் எனவும் திலீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய பரஸ்பரம் முடிவெடுத்தனர். கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்த இருவரும் நேற்று எர்ணாக்குளம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
மஞ்சு வாரியர் தனது சகோதரர் மது வாரியருடன் வந்திருந்தார். அவர் கொடுத்த மனுவில் தனக்கு திலீப் ஜீவனாம்சம் எதுவும் தரவேண்டாம். மகள் மீனாட்சி யாருடன் இருக்க வேண்டும் என்பதை மகளே முடிவு செய்து கொள்ளட்டும். திலீப்புடன் விவாகரத்து செய்து கொள்ள நானும் ஒப்புக்கொள்கிறேன், என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி இதன் மீதான அடுத்த விசாரணையை 6 மாதம் கழித்து வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையடுத்து கோர்ட்டில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். அவர்களை நிருபர்கள் பேட்டி எடுக்க முயற்சித்த போது இருவரும் பதில் அளிக்க மறுத்து காரில் ஏறி சென்றனர். மஞ்சு வாரியர் காரில் ஏறிய போது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதனை கைக்குட்டையால் துடைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து பேட்டியளித்த திலீப்பின் வழக்கறிஞர், "திலீப்பும் மஞ்சுவும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துள்ளதாகவும், அதன்படி சொத்துகள் பிரித்துக் கொள்ளப்படும்" என்றும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











