தில்வாலே: 50% இழப்பீடு வழங்கி வினியோகஸ்தர்களின் 'நண்பேன்டா'வாக மாறப்போகும் ஷாரூக்கான்
மும்பை: தில்வாலே படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலிக்கவில்லை என்பதால், படத்தின் நாயகன் ஷாரூக்கான் விநியோகஸ்தர்களுக்கு 50% இழப்பீடு வழங்க முன்வந்திருக்கிறார்.
கடந்த வருட டிசம்பர் மாதம் ஷாரூக்கான், கஜோல், கீர்த்தி சனோன் மற்றும் வருண் தவான் நடிப்பில் வெளியான படம் தில்வாலே.
சென்னை எக்ஸ்பிரெஸ் என்ற மாபெரும் பிளாக்பஸ்டர் படத்தை அளித்த ரோகித் ஷெட்டி இயக்கத்தில் இப்படம் வெளியானது.

தில்வாலே
2013 ம் ஆண்டு ஷாரூக்-தீபிகாவை வைத்து சென்னை எக்ஸ்பிரெஸ் என்ற சூப்பர்ஹிட் படத்தை அளித்த ரோகித் ஷெட்டி 2 வது முறையாக தில்வாலே படத்தின் மூலம் ஷாரூக்கானை இயக்க முன்வந்தார். கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தில் ஷாரூக்கான், வருண் தவான், கஜோல் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

13 வது முறை
பாலிவுட்டின் சிறந்த ஜோடி என்று புகழப்படும் ஷாரூக்கான் - கஜோல் ஜோடி இப்படத்தின் மூலம் 13 வது முறையாக இணைந்தனர்.இதற்கு முன் இருவரும் இணைந்து நடித்த குச் குச் கோதா ஹை, ஓம் சாந்தி ஓம், ரப்னே பனா டி ஜோடி மற்றும் மை நேம் இஸ் கான் ஆகிய படங்களில் இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களைக் கவர்ந்திருந்ததால் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

கடுமையான விமர்சனங்கள்
ஆனால் படம் வெளியான பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. படக்குழுவினர் எதிர்பாராத அளவிற்கு கடுமையான விமர்சனங்கள் படத்திற்கு எழுந்தன. படத்தின் ஹீரோ ஷாரூக்கும் மனந்திறந்து இந்தப் படம் எனக்கு ஏமாற்றத்தை அளித்து விட்டது என்று ஒப்புக் கொண்டார்.

50% இழப்பீடு
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியாவில் 150 கோடிகள் மட்டுமே வசூலித்தது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு கணிசமான அளவில் இப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அறிந்த ஷாரூக்கான் தற்போது 50% இழப்பீடை விநியோகஸ்தர்களுக்கு அளிக்க முன்வந்திருக்கிறார். தில்வாலே படத்தின் தயாரிப்பாளர்களில் ஷாரூக்கானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











