அந்த வலி இருக்கட்டும்..கொரோனா தந்த வாய்ப்பு.. தினமும் விதவிதமாக சமைக்கும் சந்தானம் பட இயக்குனர்!
சென்னை: கொரோனா காரணமாக, சந்தானம் பட இயக்குனர் தினமும் விதவிதமாக சமைப்பதாகத் தெரிவித்தார்.
சந்தானம் நடித்துள்ள படம், 'சர்வர் சுந்தரம்'. இதை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயின்.
கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதாரவி, செஃப் தாமோதரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

உணவே மருந்து
கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தமிழர்கள் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், உணவே மருந்து என்ற விஷயத்தை மையமாகக் கொண்டது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை, துபாய் வரை சென்று முடிவது போல அமைக்கப்பட்டுள்ளது.

நாகேஷ் பேரன்
நாகேஷ் நடித்த பழைய 'சர்வர் சுந்தரம்' படத்தின் டைட்டிலை ஏவிஎம் நிறுவனத்தில் அனுமதிப் பெற்று வாங்கி இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர். இதில் நாகேஷ் பேரன் பிஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது. பல்வேறு காரணங்களால் தள்ளிப் போயிருக்கிறது.

ஊரடங்கு
இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 14 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆனந்த் பால்கி
இதற்கிடையே, சினிமா பிரபலங்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். சர்வர் சுந்தரம் இயக்குனர் ஆனந்த் பால்கி, செஃப் என்பதால் தினமும் விதவிதமாகச் சமைத்து வருவதாகத் தெரிவித்தார். கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது இதைச் சொன்னார்.

வாய்ப்பு கிடைக்கல
அவர் மேலும் கூறும்போது, இதற்கு முன் குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கொரோனாவால் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் குழந்தைகளுடன் விளையாடுகிறேன். குழந்தைகளுக்கு என்ன பிடிக்கிறது, எதை சாப்பிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் மனைவி இவ்வளவு அழகாக சமைப்பாரா என்பது இதற்கு முன் தெரியவில்லை.

கடினமான காலகட்டம்
சர்வர் சுந்தரம் படம் ரிலீஸ் ஆகாததால், இருக்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, இந்த காலகட்டத்தில் தியானம் செய்ய தொடங்கினேன். அது என்னை அமைதிக்கு திருப்பி இருக்கிறது' என்ற ஆனந்த் பால்கி, 'இது கடினமான காலகட்டம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதற்கு ஒரே வழி, வீட்டில் பாதுகாப்பாக இருப்பதுதான். நான் அதை நூறு சதவிகிதம் செய்கிறேன்' என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











