டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் திருமணம்.. சிவகார்த்திகேயன் கொடுத்த சூப்பர் கிஃப்ட்
சென்னை: அபிஷன் ஜீவிந்த் இந்த வருடத்தில் கோலிவுட்டில் நம்பிக்கைக்குரிய அறிமுகமாக திகழ்கிறார். சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கியிருந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது காதலி அகிலாவை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். நேற்று அவர்களது திருமண வரவேற்பு நடந்தது.
தமிழில் ஃபீல் குட் சினிமாக்களே வருவதில்லை என்ற குறை நீண்ட நாட்களாக திரைத்துறையினரிடமும்,ரசிகர்களிடமும் இருந்தது. அந்தக் குறையை போக்கும் விதமாக வந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். திருச்சியை சேர்ந்த அவருக்கு 25 வயதுதான் ஆகிறது. சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கி அனைவரையுமே திரும்பிபார்க்கவைத்துவிட்டார் அவர்.
என்ன ஸ்பெஷல்?: மனிதம்தான் படத்தின் ஒன்லைன். சசிகுமாரையும், சிம்ரனையும் ஈழத்து அகதிகளாக வைத்து அவர்களுக்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் உதவிகளும், அவர்கள் மற்றவர்களை மனிதம் உள்ள மனிதர்களாக மாற்றும்படியும் அமைத்திருந்த திரைக்கதை பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் இயக்கத்தை பார்த்து இத்தனை சிறு வயதில் இவ்வளவு பக்குவமும், இவ்வளவு திரை மொழியும் தெரிந்திருக்கிறதா என அனைவருமே புருவம் உயர்த்தினார்கள்.

குவிந்த பாராட்டு: ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை ஜாம்பவான்களையும் பாராட்ட வைத்தார் அவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து தனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்தார். மேலும் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியும் தனது பாராட்டினை ட்விட்டர் பக்கத்தில் பக்ரிந்திருந்தார். இப்படி முதல் படத்திலேயே ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்த அபிஷன் தற்போது ஹீரோ அவதாரமும் எடுத்துவிட்டார் கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.
க்யூட் ப்ரோபோஸ்: ரிலீஸுக்கு முன்னதாக இப்படத்தின் விழாவில் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு தனது தோழி அகிலாவிடம் மேடையில் வைத்து காதலை வெளிப்படுத்தினார். அதுவே அப்போது பெரிய கவனத்தை ஈர்த்தது. அதனால்தான் என்னவோ டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அவ்வளவு இயல்பாகவும், அழகாகவும் காதல் ப்ரோபோஸ் செய்யும் காட்சியை வைக்க முடிந்தது போல. படம் வணிக ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்று அபிஷனுக்கான எதிர்காலத்தை திரைத்துறையில் ஆழமாக்கியிருக்கிறது.
திருமணம்: சூழல் இப்படி இருக்க தனது காதலி அகிலாவை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு நேற்று சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்தும் வைத்தார். அப்போது தனது மனைவி அகிலாவையும் அழைத்துவந்து நெகிழ்ச்சியோடு பேசினார். அதனைத் தொடர்ந்து நேற்று திருமண வரவேற்பு நடந்தது.
சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு: அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார். கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய அவர், அபிஷனுக்கு தங்க செயின் ஒன்றையும் பரிசாக வழங்கினார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. முன்னதாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு எஸ்கேவும் அபிஷனை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











