கதையின் அவுட்லைன் கேட்டாலே போதும்..நம்பி நடிக்கலாம்..செல்வராகவன், மிஷ்கினை புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா!
சென்னை : இயக்குநர் மிஷ்கின் மற்றும் செல்வராகவனின் படங்களில் கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு பல துறைகளிலும் தடம் பதித்து, அவற்றில் வெற்றியும் கண்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
அஜித் நடித்த ஆசை படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக அஜித்தை வைத்து வாலி என்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார்.

எஸ்.ஜே.சூர்யா
வாலி திரைப்படம் அஜித்திற்கு சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் அஜித் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் அதிரடி காட்டி இருந்தார். வாலி திரைப்படத்தை தொடர்ந்து குஷி படத்தை இயக்கி அந்த படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.

மிரட்டலான வில்லன்
இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா நியூ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, அந்த படத்தில் சைகோவாக பட்டையை கிளப்பி இருந்தார். இந்தப்படத்தை தொடர்ந்து, மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, டான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். மாநாடு திரைப்படத்தில் தலைவரே..தலைவரே என கூறி கை தட்டலை அள்ளினார்.

வதந்தி வெப் தொடர்
தற்போது எஸ் ஜே சூர்யா ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வதந்தி எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் டிசம்பர் 2ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும்
இந்நிலையில் ஊடகம் ஒன்று பேட்டி அளித்துள்ள எஸ்.ஜே. சூர்யா, ஆஸ்கர் விருது வாங்குவது, தேசிய விருது வாங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார் என்றால், அந்த படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்க வேண்டும் அது தான் என் ஆசை என்றார்.

கதையின் அவுட்லைனை கேட்டபோதும்
இயக்குநர்கள் செல்வராகவன் மற்றும் மிஷ்கினை வெகுவாக புகழ்ந்த எஸ்.ஜே சூர்யா, இவர்கள் இயக்கும் படத்தின் முழுக்கதையையும் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, கதையின் அவுட்லைனை மட்டும் கேட்டுவிட்டு கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம் என்றார். அவர்களின் இயக்கம் மற்றும் கதையின் மீது எனக்கு அலாதி நம்பிக்கை இருக்கிறது என்ற எஸ்.ஜே. சூர்யா,இப்போது படங்களை இயக்கும் எண்ணம் இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











