நோ சொன்ன சூர்யா… கதையை மாற்றும் பாலா… புதிய இயக்குநருடன் தொடங்கும் வணங்கான்!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா.
முன்னதாக பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் கமிட்டாகி இருந்த சூர்யா, 40 நாட்கள் வரை படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.
ஆனால், படப்பிடிப்பு திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் வணங்கான் மீண்டும் வருமா என்ற கேள்வி எழுந்தது.

மீண்டும் இணைந்த கூட்டணி
சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது இயக்குநர் பாலா தான். ஆரம்ப கலங்களில் நடிக்கத் தெரியவில்லை என்ற சூர்யா மீதான விமர்சனங்களுக்கு பாலாவின் 'நந்தா' திரைப்படம் பதிலடி கொடுத்தது. சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் நந்தா சூப்பர் ஹிட் அடித்ததால், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன. அதன்பின்னர், பிதாமகன் படத்தில் சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணைந்தது. பிதாமகனுக்குப் பிறகு இணையாமல் தண்ணி காட்டி வந்த இந்தக் கூட்டணி, இறுதியாக வணங்கான் படத்தில் ஒன்று சேர்ந்தது.

பாதியில் நின்ற படப்பிடிப்பு
சூர்யா - பாலா கூட்டணியில் தொடங்கப்பட்ட வணங்கான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட் ஆனார். அதேபோல், சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை கிருத்தி ஷெட்டி இணைந்தார். வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி, கேரளா பகுதிகளில் தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், திடீரென படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதுவரை பாலா நடத்திய ஷூட்டிங்கும் கதையும் திருப்தி இல்லை என்பதால், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.

வணங்கான் கதையில் மாற்றம்?
இதனால், வணங்கான் படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் பிஸியானார் சூர்யா. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனிடையே சமீபத்தில் வணங்கான் படம் குறித்து பாலாவிடம் கேட்கப்பட்ட போது, 'படம் கண்டிப்பாக வரும்" எனக் கூறியிருந்தார். இதுகுறித்து சமீபத்தில் வெளியான தகவலின் படி, வணங்கான் கதையை சூர்யா மாற்ற சொல்லிவிட்டதால், பாலா புதிய கதையை எழுதி வருவதாக சொல்லப்படுகிறது.

அருவி இயக்குநர் உள்ளே
முக்கியமாக புதிய திரைக்கதை எழுதுவதில், பாலாவுடன் இயக்குநர் அருண் பிரபுவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருவி, வாழ் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண்பிரபு, சூர்யாவின் அழைப்பின் பேரில் வணங்கான் படத்தில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. பாலா, அருண் பிரபு இணைந்து திரைக்கதை எழுதி முடித்ததும், வணங்கான் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க சூர்யா முடிவு செய்துள்ளாராம். ஆனாலும், விரைவிலேயே இந்தக் கூட்டணியை திரும்பவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











