பாலா–சூர்யா இணையும் படம் எப்போ...வெளியான அசத்தல் தகவல்
சென்னை : டைரக்டர் பாலா, சூர்யா இணையும் படம் எப்போது துவங்கப்பட உள்ளது என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அசத்தலான அப்டேட்களால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.
சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமான பாலா, தேசிய விருது உள்ளிட்ட விருது வெல்லும் படங்களை இயக்குவதில் தனித்துவம் வாய்ந்தவராக வலம் வந்தார். விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா என பல நடிகர்களை செதுக்கி, அவர்களின் நடிப்பு திறமையை அனைவரும் அறியும் படி வெளியே கொண்டு வந்தவர் பாலா.

சூர்யாவை செதுக்கிய பாலா
சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து வந்த சூர்யாவை, நந்தாவில் மாறுபட்ட கோணத்தில் காட்டி அவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய பெருமை பாலாவையே சேரும். சூர்யாவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படமாக நந்தா அமைந்தது. இதைத் தொடர்ந்து சூர்யா, விக்ரமை வைத்து பாலா இயக்கிய பிதாமகன் படமும் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.

சறுக்கி விட்ட நாச்சியார்
ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை வைத்து பாலா இயக்கிய நாச்சியார் படம் அவருக்கு மிகப் பெரிய சரிவை கொடுத்தது. பல சர்ச்சைகளையும் இந்த படம் சந்தித்தது. இதைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து, தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் பல பிரச்சனைகள் ஏற்பட, கடைசியில் இந்த படத்தில் இருந்தே பாலா விலகும் நிலை ஏற்பட்டது. பிறகு வேறு டைரக்டரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் இரண்டாவது முறையாக இந்த படத்தை எடுத்தனர்.

மீண்டும் சூர்யா–பாலா காம்போ
அதன் பிறகு கொரோனா காரணமாக படம் ஏதும் இயக்காமல் இருந்த பாலா, தற்போது விசித்திரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலா இயக்க போகும் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாகவும், இதில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் முதலில் கூறப்பட்டது. அதர்வா ஹீரோவாகவும், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தில் ஹீரோவாக சூர்யாவே நடிக்க போவது உறுதியாகி உள்ளது.

மீண்டும் இணையும் சூர்யா–ஜோதிகா
சூர்யாவிற்கு ஏற்ற மாதிரி படத்தில் கதையை மாற்றி உள்ள பாலா, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அவரது காதல் மனைவி ஜோதிகாவையே நடிக்க வைக்க போகிறார். கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா-ஜோதிகா ஜோடி இணைந்து நடிக்க போகிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க போகிறார். ஏற்கனவே சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார்.

பாலா–சூர்யா படம் எப்போ
லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் சூர்யா-பாலா-ஜோதிகா இணையும் இந்த படத்தின் ஷுட்டிங் மார்ச் 18 ம் தேதி மதுரையில் துவங்கப்பட உள்ளதாம்.இந்த படம் மதுரையை சுற்றி உள்ள இடங்களில் தான் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக மதுரையில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறதாம். இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











