யாரும் எம்மை சந்திக்க வரவேண்டாம்.. பிறந்தநாளில் இயக்குநர் பாரதிராஜா ரசிகர்களுக்கு வேண்டுகோள்!
சென்னை: தனது பிறந்தநாளில் தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் என இயக்குநர் பாரதிராஜா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர்- கருத்தம்மாள் தம்பதிக்கு 1947 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி சின்னச்சாமியாக பிறந்தவர் பாரதிராஜா.
சுகாதாரத் துறை அதிகாரியாக பணியாற்றிய பாரதிராஜா சினிமா மீது இருந்த ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்தார்.

பல வெற்றிப்படங்கள்
1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாரதிராஜா. தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம். அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டக்க, மண்வாசனை, புதுமைப் பெண், முதல் மரியாதை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்தார்.

மீண்டும் ஒரு மரியாதை
தொடர்ந்து எராளமான படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பாரதிராஜா பல படங்களை தயாரித்தும் உள்ளார். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான படம் மீண்டும் ஒரு மரியாதை. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்தில் பாரதிராஜா, நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

77வது பிறந்தநாள்
இந்தப் படத்தை பாரதிராஜாவே இயக்கி தயாரித்திருந்தார். பாரதிராஜா பல படங்களில் நடித்தும் உள்ளார். இயக்குநர் பாரதிராஜா 6 முறை தேசிய விருதுகளையும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 77 வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

சந்திக்க வர வேண்டாம்..
இதனை முன்னிட்டு அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை யாரும் நேரில் சந்திக்க வரவேண்டாம் என டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பாரதிராஜா. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், யாரும் எம்மை சந்திக்க வர வேண்டாம்.. என சமூக பொறுப்பு உணர்ந்து தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பெற்றுக்கொள்கிறேன்..
மற்றொரு பதிவில் என் இனிய தமிழ் மக்களே,
என் கலைத்துறை நண்பர்களே, என் சொந்தங்களே பந்தங்களே,முதன் முதலாக கொரோனா
எதிரொலி சமூக விழிப்புணர்வு காரணமாக இதயம் தொடுத்த உங்கள் வாழ்த்துக்களை எங்கிருந்தாலும், இதயம் கனிந்து பெற்றுக்கொள்கிறேன்.. என தெரிவித்துள்ளார்.

டிவிட் மூலம் வாழ்த்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இயக்குநர் பாரதிராஜா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தங்களின் டிவிட் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











