'ரஜினி சார் குரலுக்கு தனி மதிப்பிருக்கிறது'! - இயக்குநர் சேரன்
சென்னை: ரஜினி சார்... ஜிஎஸ்டிக்கு எதிரா நீங்க குரல் கொடுங்க என்று இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பால் 60 சதவீதம் வரியாகவே செலுத்த வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது திரையுலகம். இதுவரை இந்த இரு வரிகளையுமே கட்டாமல் இருந்த நிலையில், திடீரென இரட்டை வரி விதித்திருப்பது, திரைத் துறையை முடக்கிப் போட்டுள்ளது.

ஒரு பக்கம், தியேட்டர்கள் மூடல், இன்னொரு பக்கம் திரைப் பிரபலங்கள் எதிர்ப்புக் குரல் என போராட்டம் வலுத்துள்ளது.
இந்த சூழலில் பலரும் ஜிஎஸ்டி, கேளிக்கை வரியை நீக்க ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இயக்குநர் சேரனும் இதை வலியுறுத்தியுள்ளார். ரஜினியின் குரலுக்கு தனி மதிப்பு உள்ளது. எனவே அவர் ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். தன் ட்விட்டர் பக்கத்தில், "ரஜினி சார்... ஜிஎஸ்டி, 30 சதவீத கேளிக்கை வரியைக் குறைக்க தயவுசெய்து குரல் கொடுங்கள். நமது துறையைக் காக்க வேண்டிய நேரமிது. உங்கள் குரலுக்கென தனி மதிப்பு இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
சேரன் இந்த வேண்டுகோளை விடுத்த சில மணி நேரங்களில்தான், கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











