வனயுத்தம் - இயக்குநர் கவுதமன், பழ நெடுமாறன் எதிர்ப்பு
இயக்குநர் ஏ எம்ஆர் ரமேஷ் தன்னைச் சந்திக்கவே இல்லை என்றும், வனயுத்தம் படம் ராஜ்குமார் குடும்பத்தை திருப்திப்படுத்த மட்டுமே எடுக்கப்படுகிறது என்றும் இயக்குநர் வ கவுதமன் கூறியுள்ளார்.
வீரப்பன் கதையை சந்தனக்காடு என்ற பெயரில் இயக்கியவர் கவுதமன். வனயுத்தம் விவகாரம் பற்றி அவர் கூறுகையில், "இந்தப் படம் கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுவரும் படம்.
அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்தில் தயாராகிறது. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பன் அவரை கொடூரமாக நடத்தியதுபோல படத்தில் காட்சிகள் வைத்துள்ளனர். ஆனால் வீரப்பன் ராஜ்குமாரை தனது தந்தையைபோல் நடத்தினார்.
உண்மை சம்பவங்களை படமாக்கும் போது அதில் பொய்யை புகுத்தக்கூடாது. வரலாற்றை திரித்து சொல்லக்கூடாது தமிழன் என்ற முறையில் இப்படத்தை நான் எதிர்க்கிறேன்.
என்னை சந்தித்து கதை விவாதம் நடத்தியதாக வனயுத்தம் படத்தின் டைரக்டர் ரமேஷ் கூறியிருப்பது பொய்யான தகவல்.
வீரப்பன் காலத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்களை கர்நாடக போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். பெண்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்துள்ளனர். இதையெல்லாம் வன யுத்தத்தில் காட்டும் துணிச்சல் உண்டா ரமேஷுக்கு?" என்றார்.
பழ நெடுமாறன்
ஏ எம் ஆர் ரமேஷ் தன்னைச் சந்தித்ததாகக் கூறுவது உண்மையல்ல என்றும், நிஜமான கதைகளை எடுக்கும்போது உண்மைக்கு மாறான காட்சிகளை வைக்கக் கூடாது என்று தமிழ் உணர்வாளர் பழ நெடுமாறன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











