கங்காணி பேச்சை நம்பி சனம் போகுதே.. பாலாவின் 'பரதேசி' நடிப்பு அனுபவம் பற்றி இயக்குனர் ஜெர்ரி!
சென்னை: 'பரதேசி' படத்தில் கங்காணியாக நடித்த அனுபவத்தை இயக்குனர் ஜெர்ரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில், விக்ரம், அஜித், ரகுவரன் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, ஷெரின், காயத்ரி ரகுராம் நடித்த விசில் படங்களை இயக்கியவர்கள், இரட்டை இயக்குனர்களான ஜேடி -ஜெர்ரி.
இப்போது சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர்.

கங்காணி
ஏராளமான விளம்பர படங்களை இயக்கியுள்ள இவர், பல முன்னணி இயக்குனர்களின் பிரமாண்ட படங்களில் பணிபுரிந்துள்ளனர். அந்த அனுபவங்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் எழுதி வருகின்றனர். இந்த இரட்டையர்களில் ஜெர்ரி, பாலாவின் 'பரதேசி' படத்தில் கங்காணி கேரக்டரில் மிரட்டலாக நடித்திருந்தார். அந்த அனுபவத்தை இப்போது எழுதி உள்ளார். 'பாலா, பரதேசி, கங்காணி - நடிகனாய் நான்' என்ற தலைப்பில் எழுதியுள்ள அவர், அதில் கூறியிருப்பதாவது:

மாட்டு வண்டி
'கங்காணி பேச்சை நம்பி சனம் போகுதே நண்டுகளை கூட்டிக்கொண்டு நரி போகுதே...' சரளைக்கல் பூமி. சுட்டெரிக்கும் வெயில். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொட்டல் பூமி. பஞ்சம் பிழைக்கப் போகும் பரதேசிகள், நீண்ட வரிசையில். வழிகாட்டியாய் ஒற்றை மாட்டு வண்டி. வண்டியில் வெற்றிலையை மென்றபடி கங்காணி. கங்காணி மேக்கப்பில் நான்.

தேயிலைக் காடு
'செங்காடே..' என்ற பாடல் வனாந்திரத்தில் ஒலிக்கிறது. 'பரதேசி' படப்பிடிப்பு. மைக்கில் தெறிக்கும் இயக்குனர் பாலாவின் கட்டளைக்கு மொத்த யூனிட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 'பரதேசி', பாலாவின் மனசுக்கு நெருக்கமான படம். வறண்ட பூமி, தேயிலைக் காடு என்று கான்ட்ராஸ்ட் லொகேஷன். நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.

கருப்பு மேக்கப்
எல்லோருக்கும் ஒரே மாதிரி சட்டி கிராப். கந்தலும் கோணியுமாய் காஸ்ட்யூம்ஸ். அட்டை கருப்பு மேக்கப் என்று எக்கச்சக்க டீட்டெய்ல்ஸ். எவ்வளவு டிரை சப்ஜெக்ட்டையும் Viewing Interest கெடாமல் சுவாரஸ்யமாகச் சொல்லத் தெரிந்தவர் பாலா. பரதேசிகள் வாழ்க்கையிலும் சில இனிய தருணங்களை ஆங்காங்கே தெளித்திருப்பார்.

மனத்தடைகளை
கங்காணி- கருணையே வடிவாகவும், காக்க வந்த தெய்வமாகவும், நயவஞ்சகத் துரோகியாகவும், ஈவு இரக்கமற்ற மிருகமாகவும், வெள்ளையனை அண்டிப்பிழைக்கும் மனிதனாகவும் பெர்பாம் பண்ண ஸ்கோப் உள்ள பிரமாதமான மல்டி டைமன்சனல் கேரக்டர். மிகவும் சங்கோஜியான என்னை எனக்குள்ளிருந்த மனத்தடைகளை விரட்டி, நடிக்க வைத்த ஆசான்.

முதல் நாள் படப்பிடிப்பு
ஒளிப்பதிவாளரும் நண்பருமான செழியனும், டைரக்ஷனில் உறுதுணையாய் இருந்த சுதா கொங்கராவும் பெரிதும் ஊக்கப்படுத்தினார்கள். உண்மையில் ஒரு நல்ல இயக்குனரால் எவரையும் நடிக்க வைத்துவிட முடியும். படப்பிடிப்பில் நடந்த பல சுவாரஸ்யங்களில் மறக்க முடியாத ஒன்று, முதல் நாள் படப்பிடிப்பு. மாலை வெயில். ஒற்றை மாட்டு வண்டி பின் தொடர, கங்காணி நடந்து வரும் காட்சி.

அது ஒரு பரவசம்
முதல் ஷாட். முதல் டேக் ஓகே செய்ய வேண்டுமே என்ற பதட்டத்தில் நான். மைக்கில் ஆக்ஷன் என்ற பாலாவின் குரல் கேட்டதும் சர்ரென்று ரத்தம் தலைக்கேற வெளி உலக பிரங்ஞையை விலக்கி கதைக்களத்தை பற்றி Consciousness-ஐ துரத்தி கேரக்டராக உருமாறி சுற்றிலும் நோட்டமிட்டபடி நடக்கத் துவங்கினேன். நடிப்பு. அது ஒரு பரவசம். செழியனின் கேமரா படம்பிடிக்க, மொத்த யூனிட்டும் என்னை நோக்கி.. அப்போது சம்பந்தமில்லாமல் ஸ்பீக்கரில் பாடல் ஒலிப்பதாய் ஓர் உணர்வு. இவ்வாறு கூறியுள்ளார்.

பாலா செய்த ஏற்பாடு
பாடல் எனக்கு மட்டும் கேட்கிறதா? பிரமையா? குழப்பத்துடன் காட்சிக்குள் என்னை திணித்தப்படி தொடர்ந்து நடிக்கிறேன். கட். ஷாட் ஓகே என்ற குரலோடு ஓவர்லாப்பில் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இது பாலா செய்த ஏற்பாடு. என் கூச்சத்தை விரட்ட. ‘கட்' என்றதும் ஆயிரம் வாலா பட்டாசு வேறு. மொத்த யூனிட்டும் கைதட்டி விசிலடிக்கிறார்கள்.

விம்மியபடி
அடக்க முடியாமல் கன்னங்களில் கண்ணீர் உருண்டோட பாலாவை தேடுகிறேன். வெடித்து சிரித்த படி கூட்டத்துக்கு நடுவில் பாலா. விம்மியபடி அப்படியே உட்கார்ந்து விட்டேன். என்ன ஒரு தருணம். நன்றி பாலா... துல்லியமாய் கற்றுக்கொடுப்பார். பரதேசியில் கங்காணியாய் என் நடிப்பு கவனிக்கப்பட்டது. சில விருதுகளும் கிடைத்தது. பர்ஸ்ட் காப்பி பார்த்த பாலா, JD-யும் தொடர்ந்து நடிக்கலாம் என்று சான்றிதழ் கொடுத்தார். நேரமும் வாய்ப்பும் அமையவில்லை. காலம் இருக்கிறது தானே? இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











