வாரிசு ரிலீஸ் ஆகுறதுல சிக்கல் வராது… வந்தா அதுதான் நடக்கும்: அஜித் பட இயக்குநரின் வார்னிங்!
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தை குறிவைத்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முன்னணி இயக்குநர் ஒருவரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

வாரிசு க்ளைமேக்ஸ்
விஜய்யின் வாரிசு ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான கேரக்டர்களில் சரத்குமார், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஒரு பாடலும் அதனை தொடர்ந்து ஐதராபாத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது,

ரிலீஸுக்கு வந்த சோதனை
வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களிலேயே வாரிசு ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துவிட்டது. இந்நிலையில், வாரிசு பொங்கலுக்கு வெளியாவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் தான் இந்த பிரச்சினை எனத் தெரிகிறது. விஜய்யின் வாரிசு படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார், வம்ஷி பைடிபள்ளி இயக்குகிறார். இவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்காக களமிறங்கும் கோலிவுட்
தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கமான TFPC, சங்கராந்தி பண்டிகை நாளில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் வெளியிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் வாரிசு படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவில் தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, விஜய்யின் வாரிசு படத்துக்கு எதிராக தான் தெலுங்கு திரையுலகம் இவ்வாறு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து இந்த பிரச்சினைக்கு எதிராக சீமான் உள்ளிட்ட மேலும் சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். இப்போது இயக்குநர் லிங்குசாமியும் இதுகுறித்து பேசியுள்ளார்.

வாரிசு ரிலீஸுக்கு சிக்கல் வராது
திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லிங்குசாமியிடம், வாரிசு படத்தின் ரிலீஸுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இன்றைய காலக்கட்டம் தான் சினிமாவின் பொற்காலம். பான் இந்தியா மார்க்கெட், ஓடிடி தளங்கள் வந்துள்ளதால் இங்கே யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது. இந்தமாதிரியான சூழலில் விஜய்யின் வாரிசு படத்துக்கு இப்படியெல்லாம் சிக்கல் வரக் கூடாது. வாரிசு படத்துக்கு தியேட்டர் தரமாட்டோம்னு சொன்னா, அது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினை பெருசாகும். அதாவது வாரிசு படத்துக்கு முன்னும் பின்னும் என விஸ்வரூபமெடுக்கும்" எனக் கூறினார்.

கண்டிப்பா பிரச்சினை முடிவுக்கு வரும்
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முக்கியமான நபர்கள் இதுபற்றி பேசி இதற்கு சுமுகமான முடிவு எடுக்கணும். இரண்டு மொழி படங்களுமே தமிழ், தெலுங்கு என்ற பாகுபாடு இல்லாமல் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. வாரிசு பிரச்சினையை இப்படி குறுகிய மனநிலையில் யாரும் பார்த்தால், அவர்கள் அதை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாத்தலன்னா இங்க எல்லாமே மாறிவிடும், இது ஒரு சின்ன சலசலப்பு தான், கண்டிப்பா எல்லாம் விலகிவிடும். அப்படியும் இல்லையென்றால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கான தீர்வை கொண்டு வருவோம்" என எச்சரிக்கை கலந்த வார்த்தைகளுடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











