சட்டரீதியாக சந்திக்க தயார்..சிறை தண்டனை குறித்து அறிக்கை வெளியிட்ட லிங்குசாமி!
சென்னை : செக் மோசடி வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து இயக்குநர் லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
லிங்குசாமி இயக்குனராக மட்டுமின்றி சில படங்களை தயாரித்தும் உள்ளார். 2015-ல் சூர்யா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதனால் கடந்த சில வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த லிங்குசாமி, விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

தி வாரியர்
இதனை தொடர்ந்து மீண்டும் வெற்றி இயக்குனராக வரவேண்டும் என அடுத்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

செக் மோசடி
பிரபல இயக்குனர் லிங்குசாமி செக் மோசடி செய்ததற்காக ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இயக்குநர் லிங்குசாமி கார்த்தி, சமந்தாவை வைத்து எண்ணி ஏழு நாள் என்ற திரைப்படத்திற்காக பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.103 கோடி கடனாக பெற்றிருந்தார். கடனை திருப்பி கேட்ட போது அதற்காக செக் கொடுத்துள்ளார் லிங்குசாமி. ஆனால், அந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி இருக்கிறது.

6 மாதம் சிறை
இதனால், லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் செக் மோடி வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சட்டரீதியாக சந்திக்க தயார்
இந்நிலையில், லிங்குசாமி அறிக்கை ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











