சினிமாவை விட ரசிகர்களுக்கு உசுரு தான் முக்கியம்... எமோஷனலான லோகேஷ் கனகராஜ்
கோவை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து விஜய் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இந்நிலையில், கோவையில் வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற இளம் தொழிலதிபர்களுக்கான விருது விழாவில் லோகேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தளபதி 67 படத்தின் அப்டேட்டுடன் ரசிகர்களுக்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றையும் கூறியுள்ளார்.

கோவையில் லோகேஷ்
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், அதனைத் தொடர்ந்து இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில் தரமான சம்பவம் செய்திருந்தார். நான்கு படங்களுமே மாஸ் ஹிட்டாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் தெறிக்கவிட்டன. இதன் தொடர்ச்சியாக அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். மாஸ்டரில் மரண மாஸ் காட்டிய அதே கூட்டணி, தளபதி 67 படத்திலும் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிபார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில், கோவையில் நடைபெற்ற விருதுவிழாவில் லோகேஷ் கலந்துகொண்டார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
கோவையில் வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற இளம் தொழிலதிபர்களுக்கான விருது விழாவில் பங்கேற்று பேசியிருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது வெறும் சினிமா தான். உயிரை டும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் என் கருத்து" எனக் கூறியுள்ளார்.

துணிவு FDFS-ல் சோகம்
மேலும், வாரிசு படம் வெளியான பிறகு தான் தளபதியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தோம். இனி 10 நாட்கள் கழித்து படம் தொடர்பான அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகும். தமிழகம் - தமிழ்நாடு என்ற விவாதம் குறித்து கேட்டதற்கு, அவர் தமிழ்நாடு என்றே அழைப்பேன் எனவும் கூறிவிட்டுச் சென்றார். ரசிகர்களுக்கு உயிர்தான் முக்கியம் என லோகேஷ் சொல்வதற்கு, துணிவு FDFS பார்க்கச் சென்ற ரசிகர் உயிரிழந்ததே காரணம் என சொல்லப்படுகிறது.

எல்லை மீறும் ரசிகர்கள்
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் FDFS, பார்க்க ரோகிணி திரையரங்கம் சென்ற பரத்குமார் என்ற ரசிகர் விபத்தில் உயிரிழந்தார். சித்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்பவர் ரோகிணி தியேட்டர் முன்பு கண்டெய்னர் லாரியின் மேல் ஆடியபடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து உயிரிழந்த பரத்குமாரின் நண்பர்களும் வேதனை தெரிவித்திருந்தனர். அதேபோல் அஜித்தின் பல அடி உயர கட்அவுட்டுக்கு கிரேனில் தொங்கியபடி ரசிகர் ஒருவர் மாலை போடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதனை மனதில் வைத்தே லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











