மறுபடியும் மகேந்திரன்... மோகமுள்ளுக்கு புதுவடிவம் தருகிறார்!

முள்ளும் மலருிம், ஜானி, உதிரிப் பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே என அழகியலும் யதார்த்தமும் கலந்த தமிழ்ப் படைப்புகளைத் தந்தவர் மகேந்திரன்.
இதுதான் உலக சினிமா என்று இன்றைக்கு எந்தெந்தப் படத்தையோ சிலர் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் சொல்லாமலேயே, உலக சினிமாவை தமிழில் தந்த படைப்பாளி மகேந்திரன்.
கடைசியாக சாசனம் என்ற படத்தை என்எப்டிசிக்காக எடுத்ததோடு ஒதுங்கிக் கொண்டார். இன்றைய சினிமாவை அவர் வெறுமனே ஒரு பார்வையாளராக கவனித்து மட்டுமே வந்தார்.
ஆனால் சமீப காலமாக மகேந்திரன் படைப்புகள் மீது மீண்டும் இளம் ரசிகர்கள் பெரும் கவனமெடுத்துப் பார்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவரது படங்கள் குறித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரசிகன் நிகழ்ச்சி.
மகேந்திரனை மீண்டும் படமெடுத்துத் தரச் சொல்லி நிறையப் பேர் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த முறை தி ஜானகிராமனின் மோகமுள் நாவலுக்கு தன் பாணியில் திரைக்கதை எழுதியுள்ளார் மகேந்திரன். மோகமுள்ளை ஏற்கெனவே ஞானராஜசேகரன் படமாக்கினார். படம் பெரிதாகப் போகவில்லை. இளையராஜா இசை மட்டும்தான் அதில் ஹைலைட். இப்போது மகேந்திரன் கைவண்ணத்தில் திரையில் புதிதாக மலரவிருக்கிறது காலத்தை வென்ற காதல் நாவல் மோகமுள்!


Click it and Unblock the Notifications











