“பட விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் ஒரு பயனும் இல்லை”... இயக்குனர் பரபரப்பு பேச்சு..!
பட விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் ஒரு பயனும் இல்லை என இயக்குனர் நேசமானவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பட விழாக்களுக்கு பிரபலங்களை அழைப்பது வீணான காரியம் என இயக்குனர் நேசமானவன் தெரிவித்துள்ளார்.
எஸ்எஸ்பி ஆர்ட்ஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கோபால் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வாங்க படம் பார்க்கலாம்'. அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் கே.எஸ்.நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளுசபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி உள்ளதுடன் இசையமைத்தும் உள்ளார் இயக்குனர் கே.எஸ்.நேசமானவன்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் முனீஸ்காந்த் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, தனக்கு முதல் முதலில் வாய்ப்பு கொடுத்தது இயக்குனர் நேசமானவன் தான் என்றார்.

முனீஸ்காந்த் நெகிழ்ச்சி
இதுகுறித்து அவர் பேசியதாவது, "சினிமாக்காரன் என்கிற படத்தில் இருந்து எனக்கு இயக்குனர் நேசமானவனை நன்கு தெரியும். வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப டைரக்டர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார். அந்த நன்றிக்காக தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்" என நெகிழ்ந்தார்.

இயக்குனர் நேசமானவன்
இயக்குனர் நேசமானவன் பேசும்போது, "பெருமைக்காக சொல்லவில்லை என்றாலும், என்னுடைய இயக்கத்தில் நடித்த முனீஸ்காந்த் இன்று உயர்ந்த இடத்தில் இருப்பதை கண்டு நான் சந்தோசப்படுகிறேன்.. என்னுடைய படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மிக பெரிய இடத்திற்கு வந்து விட மாட்டாரா என்று ஆசைப்பட்டேன். அது நடந்து விட்டது.

பிரபலங்களை அழைப்பது வீண்
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக நாங்கள் அழைக்கவில்லை. காரணம் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் பிரபலங்களை அழைத்து, அவர்களை பேசவைத்து அவர்களை கவனித்து அனுப்புவது மட்டுமே வேலையாக மாறிவிடும்.

கவுரவிக்க முடியாது
எங்களுக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அடுத்ததாக எங்கள் படத்தை திரையில் கொண்டு வருவதற்கு தங்கள் உழைப்பை கொடுக்க தயாராக இருக்கும் வினியோகஸ்தர்களையும் எங்களால் மேடையேற்றி கவுரவிக்க முடியாமல் போய்விடும்.

ஒரு தியேட்டர் கிடைக்காது
விழாவிற்கு வரும் பிரபலங்கள் பேசுவதால் படத்திற்கு ஒரு தியேட்டர் கிடைத்துவிடாது. அங்கே வினியோகஸ்தர்களின் தயவுதான் நமக்கு தேவைப்படும். அதனாலேயே சிறப்பு விருந்தினர்கள் என யாரையும் அழைக்கவில்லை" என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்


Click it and Unblock the Notifications











