பைசன்தான் அப்படினா டியூட் படமும் அப்படியா?.. மோகன் ஜி ஏமாற்றம்?.. ஒரே அருவருப்பாம்.. உஷ்ணமாகுறாரே
சென்னை: தீபாவளிக்கு வெளியான டியூட், பைசன், டீசல் ஆகிய மூன்று படங்களின் கதைக்களங்களுமே அனைவராலும் கொண்டாடப்பட்டன. டீசல் மற்ற இரண்டு படங்களைவிட வரவேற்பை குறைவாக பெற்றாலும் அதுவும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. இப்படி இளைஞர்கள் களமிறங்கிய இந்த தீபாவளி கோலிவுட்டுக்கு வெற்றிதான். இந்நிலையில் டியூட் படம் அருவருப்பாக இருக்கிறது என இயக்குநர் மோகன் ஜி களத்தில் குதித்திருக்கிறார்.
தீபாவளி பண்டிகை என்றாலே ரஜினி - கமல், அஜித் - விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் களமிறங்கி போட்டியிடும். ஆனால் இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் என அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்கள் போட்டிக்கு இறங்கின. இவற்றில் மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. முக்கியமாக அதன் இயக்குநர்கள் எடுத்துக்கொண்ட கதைக்களங்களும், அவர்கள் கூறிய விதமும் சிறப்பாக இருந்ததென ரசிகர்கள் கூறுகிறார்கள்.
பிரதீப் ரங்கநாதனின் டியூட்: இப்படத்தை கீர்த்திஸ்வரன் இயக்கியிருந்தார். இவர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தான் காதலிக்கும் ஒரு பெண்ணை அவள் காதலிக்கும் பையனுடன் சேர்த்து வைப்பது என்ற ஷாஜஹான், அபூர்வ சகோதரர்கள் ரக கதையாக இருந்தாலும்; அதில் ஆணவ கொலையை எதிர்த்து பேசியிருந்த விஷயம் பெரிய கவனத்தை ஈர்த்து படம் கொண்டாடப்படுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.

பைசன்: அதேபோல் பைசன் திரைப்படமும் மாரி செல்வராஜ் இயக்கம் என்பதால் வழக்கம்போல் தீவிரமான விஷயத்தை பேசியது. தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலையும், அவர்களது மனநிலையையும் மாற்றும்வகையில், சாதி ஒற்றுமையை காத்திரமாக காட்டியிருந்தார்கள். மாரியின் முந்தையை படங்களை போலவே இந்தப் படமும் சிறப்புக்குரிய ஒன்றாக கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே வசூலிலும் சக்கைப்போடு போட்டுவருகின்றன.
எதிர்ப்பும் உண்டுதான்: இவ்விரு படங்களுமே சமத்துவம், முற்போக்கு ஆகிய நல்ல விஷயத்தை பேசியிருக்கின்றன. அவை ஒருதரப்பினருக்கு செட் ஆகவில்லை. மேலும் பைசன் படத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி டியூட் படத்துக்கு சென்ற பிற்போக்குவாதிகளை இயக்குநர் கீர்த்தி சத்தம் இல்லாமல் செய்து அனுப்பிவிட்டார். எனவே ஆங்காங்கே டியூட் படத்துக்கு எதிராகவும் அவர்கள முனகலை ஆரம்பித்திருக்கிறார்கள்.
மோகன் ஜி பேட்டி: இந்நிலையில் திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி டியூட் படம் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "டியூட் படத்தில் ஆணவ கொலை பற்றி பேசியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் புது காதலருக்கு பிறந்த குழந்தைக்கு இன்னொருவரின் இனிஷியல் போட்டு அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக தங்க அவர் வீட்டிலேயே அனுமதி கொடுப்பதை பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது.
இதெல்லாம் தப்புங்க: இப்படி ஒரு விஷயத்தை இயக்குநர் ஞாயப்படுத்தியிருப்பது தவறு. இந்தப் படம் அடுத்த தலைமுறைக்கு தவறான உதாரணம். இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்றுதான் கேட்க தோன்றுகிறது" என்றார். இதனைப் பார்த்த பலரும், பெண்ணின் உணர்வுக்கும், அவள் மனதுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எதையும் மோகன் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதில் ஏதோ ஒரு தவறை கண்டுபிடிப்பார் என்பதற்கு இது ஒரு உதாரணம் என சோஷியல் மீடியாவில் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











