இதுக்கு நீங்க பிட்டு படம் எடுக்கலாம்.. டியூட் படத்தை விளாசிய பேரரசு.. அய்யோ எவ்வளவு கோபம்?
சென்னை: கீர்த்திஸ்வரன் இயக்கிய டியூட் திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வரிசையாக 100 கோடி ரூபாய் வசூலிக்கும் மூன்றாவது படம் இதுவாகும். படத்துக்கு பாராட்டு எழுந்தாலும் எதிர்ப்புகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் திருப்பாச்சி, சிவகாசி படங்களின் இயக்குநர் பேரரசுவும் காட்டமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படமும் டிராகன், லவ் டுடே வரிசையில் ஹிட்டாகுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே எழுந்திருந்தது. மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்க; சரத்குமார் முக்கியமான வேடத்தை ஏற்றிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது.
அதே ரிசல்ட்தான்: போட்டிக்கு பைசன், டீசல் ஆகிய இரண்டு படங்கள் வெளியானாலும் முதல் டியூட் படத்துக்குத்தான் அதிக அளவு கூட்டம் சென்றது. ஏனெனில் பிரதீப்புக்கு இருக்கும் மார்க்கெட் அப்படி. தாங்கள் எதிர்பார்த்தபடியே படம் ஜனரஞ்சகமாக அமைந்தது என படம் பார்த்த ரசிகர்கள் முதல் காட்சி முடிவிலேயே பாசிட்டிவ் விமர்சனத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எனவே நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்தது.

100 கோடி ரூபாய் வசூல்: முதல் சில நாட்களிலேயே படமானது 50 கோடி ரூபாய் வசூலை உலகளவில் தொட்டது. எனவே இதுவும் கண்டிப்பாக நூறு கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. கணிப்புப்படியே ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாயை அள்ளியது. பிரதீப் இந்த மைல்கல்லை தொடுவது வரிசையாக மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து ஒட்டுமொத்த திரைத்துறையும் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது.
வரும் எதிர்ப்புகள்: படத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயம் ஒருதரப்பினரால் கொண்டாடப்பட்டாலும் இன்னொரு தரப்பினரால் எதிர்க்கப்படுகிறது. இயக்குநர் மோகன் ஜி காட்டமாக தனது எதிர் கருத்தை முன்வைத்தார். அதேபோல் பாக்யராஜ் ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பேட்டியில், 'இப்படத்தில் சில தவறுகள் இருப்பதாக' தனது எதிர்ப்பை நாசூக்காக வைத்தார். இந்நிலையில் இயக்குநர் பேரரசுவும் அந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார்.
பேரரசு எதிர்ப்பு: வள்ளுவன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "ஜாதி படம், ஆக்ஷன் படம், எமோஷனல் படம், த்ரில்லர் படம் என எந்தவகை படமாக வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அதன் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். அதுதான் கலைக்கு செய்யும் சேவை. நோக்கம் சரியாக இல்லையென்றால் கலைக்கு செய்யும் துரோகம். இப்போது என்ன மாதிரியெல்லாமோ படத்தை எடுக்கிறார்கள். இதற்கு நீங்கள் பேசாமல் ஆபாச படத்தை எடுத்துவிடலாம். அப்படி சொல்லிவிட்டு எடுத்தால் அதை பிடித்தவர்கள் சென்று பார்ப்பார்கள். ஆனால் நல்ல படம் எடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். போய் பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











