பைசன் முட்டி மோதுவான்.. இது மைல்கல் பாராட்டிய இன்னொரு இயக்குநர்.. மாரி செல்வராஜுக்கு செம ரெஸ்பான்ஸ்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் கொண்டாடிவருகிறார்கள். ரஜினிகாந்த், வசந்தபாலன், லிங்குசாமி என நீளும் அந்த லிஸ்ட்டில் இப்போது கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் ஆகிய படங்களின் இயக்குநர் இரா.சரவணனும் இணைந்திருக்கிறார். படத்தை பாராட்டி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் சரவணன்.
மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக வந்திருக்கிறது பைசன். துருவ் விக்ரம் கூறியது போல் இதுதான் அவரது முதல் படம் என்கிற அளவுக்கு அவரது உழைப்பு இருந்தது. மாரியும், துருவ்வும் சேர்ந்து ஸ்க்ரீனில் பெரிய மேஜிக்கை நிகழ்த்திவிட்டார்கள். இதுவரை உலகம் முழுவதும் ஐந்து நாட்களில் 35 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் 50 கோடி ரூபாய் கிளப்பில் படம் இணையும் என்றே கருதப்படுகிறது.
பாராட்டு மழை: ஒருபக்கம் படத்துக்கு வசூல் மழை பொழிந்துகொண்டிருக்க; மறுபக்கம் பாராட்டு மழையும் பொழிகிறது. ரஜினிகாந்த், வசந்தபாலன், லிங்குசாமி உள்ளிட்டோர் மாரி செல்வராஜை பாராட்டி தள்ளிவிட்டார்கள். தான் இயக்கிய ஐந்து படங்களுக்குமே திரைத்துறையினரிடமிருந்து தொடர்ந்து பாராட்டை பெற்றுவருகிறார் அவர். இந்நிலையில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணனும் தனது பங்குக்கு பாராட்டியிருக்கிறார்.

இரா.சரவணன் பதிவு: அவர் தனது முகநூல் பக்கத்தில் பைசன் படம் குறித்து, "இன்றுதான் 'பைசன்' பார்த்தேன். எந்த விமர்சனங்களையும் பார்க்காமல் எவ்வித கருத்துகளையும் மனதிற்குள் நிரப்பிக் கொள்ளாமல் இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பைப் பார்க்கப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு மட்டும்தான். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்தக் கதை மாந்தர்களில் ஒருவனாகக் கலந்துவிட்டேன் என்பதே உண்மை. படம் முழுக்க தவிப்பும் கேள்வியுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற கிட்டானின் மூச்சு நமக்குள்ளும் இரைக்கிறது.
போட்டு உடைத்திருக்கிறார்: இதுதான் கதை என்கிற நேர்க்கோட்டை மட்டுமே பார்த்துப் பயணிக்கிற படங்களுக்கு மத்தியில், ஒரு களத்தின் மொத்தத்தையும் காட்சிப்படுத்தி, எல்லோர் வாழ்வையும் பந்தி வைத்து, அதன் வழியே கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் திகைக்க வைக்கிறார். மிகப்பெரிய போராட்டத்திற்குத் தயாராகும் ஒரு கலைஞனால் மட்டுமே இத்தகைய கதைகளை எவர் மதிப்பீட்டுக்கும் பயப்படாமல் எடுக்க முடியும். முண்டித் துடித்து முன்னேறப் பாயும் மனிதர்களைச் சாதியும் அதையொட்டிய கொடுவினைகளும் எப்படியெல்லாம் கூறு போடுகின்றன என்பதைப் பொளேரெனப் போட்டு உடைத்திருக்கிறார்.
கடலை கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்: இதுகாலம் வரை சாதிய வலியைச் சொன்ன படங்களுக்கும் 'பைசன்' ஆக்கத்திற்கும் நிறைய வேறுபாடு. முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் வலியைத் தராசு முள்ளாக நின்று இயக்குநர் மாரி செல்வராஜ் முன்வைத்திருக்கும் விதம் அற்புதமானது. ஒரு படத்தின் வழியே ஒரு கடலைக் கொண்டுவந்து கொட்டியதுபோல் அத்தனை விதமான பார்வைகளும் நுட்பங்களும் கேள்விகளும் நமக்குள் அலையடிக்கின்றன.
பைசன் ஒரு மைல்கல்: ஆங்காரமாய், துயரமாய், கொண்டாட்டமாய் முங்கி மூழ்க வைக்கிறது நிவாஸ் கே பிரசன்னாவின் இசை. நிவாஸ் வாழ்வில் 'பைசன்' ஒரு மைல்கல்! விழிகள் பிதுங்கி வெளியே விழுந்துவிடும் கணக்காக ஒரு தகப்பனின் தவிப்பை பசுபதி சார் வெளிப்படுத்தி இருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் கலங்கடிக்கின்றன. அமீர் அண்ணன் அச்சு அசலாகப் பொருந்திப் போகும் பாத்திரத்தில் நின்று விளையாடி இருக்கிறார். படத்தின் நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் மாடாய் உழைத்திருக்கிறார்கள்.
சமூகம் சார்ந்து படம் செய்கிறவர்கள் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டும் என்பதற்கும் 'பைசன்' நல்ல முன்னுதாரணம். பரிட்சைக்குப் போகும் கடைசி நிமிடம் வரை புத்தகம் புரட்டும் மாணவனைப் போல் ஒரு படத்தின் நூலளவு இடத்தில்கூட சமூகக் கூறுகளை நுழைத்துக் காட்டி, "முன்னேறி மேல போங்கப்பா..." என நம் முதுகிலும் தட்டி அனுப்புகிறது 'பைசன்' படம். மகத்தான படைப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரித்த இயக்குநர் ரஞ்சித், உறுதுணையாக நின்ற அத்தனை உள்ளங்களும் கொண்டாடத்தக்கவர்கள். 'பைசன்' பல காலத்திற்கு எல்லோர் நெஞ்சங்களிலும் முட்டி மோதுவான்" என்று பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











