ஆர்ஆர்ஆர் படத்தில் இந்து மதம் குறித்த சித்தரிப்பு… தான் யார் என உண்மையை ஒப்புக்கொண்ட ராஜமெளலி...
அமெரிக்கா: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் தற்போது ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றுள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ஆஸ்கரில் போட்டியிடும் ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குநர் ராஜமெளலி அமெரிக்கா சென்றுள்ளார்.

ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்
ராஜமெளலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில், ஆர்ஆர்ஆர் சிறந்த படம், சிறந்த இயக்குநர், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த நடிகர் உட்பட மொத்தம் 15 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளது.

அமெரிக்காவில் ராஜமெளலி
இதனையடுத்து ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இயக்குநர் ராஜமெளலி அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' வெளியான பிறகு சோழர்கள் காலகட்டம் குறித்தும், அப்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக ராஜராஜ சோழன் இந்து மன்னனா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ராஜமெளலியும் இந்து மதம் குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் இந்து மதம்
முன்னதாக ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இந்து மதம் குறித்து அதீதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ராஜமெளலி மீதும் வலதுசாரி ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற ராஜமெளலி, இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல" என அதிரடியாக கூறியுள்ளார்.

இந்து – இந்து மதம் வித்தியாசம்
மேலும், ஆர்ஆர்ஆர் படத்தில் இந்து மதத்தின் சித்தரிப்பு குறித்தும் அவர் பேசினார். ராஜமவுலி அதில், "இந்து மதம், இந்து தர்மம் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளன. ஆர்ஆர்ஆர் இந்து நூல்களுடன் தொடர்புடைய பாத்திரங்களை கடன் வாங்கிதான் உருவாகியுள்ளது. குறிப்பாக முக்கியமான கேரக்டர்கள் இந்துக் கடவுள்களின் பதிப்புகளாக உருவாகின. ஆனால், பலரும் அது இந்து மதம் என நினைக்கின்றனர். இந்துமதம் தற்போதைய சூழலில் உள்ளது. ஆனால் இந்து மதத்திற்கு முன், இந்து தர்மம் இருந்தது. இது ஒரு வாழ்க்கை முறை, தத்துவம். நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல, ஆனால் நீங்கள் தர்மத்தை எடுத்துக் கொண்டால், நான் இந்து" தான் எனக் கூறியுள்ளார்.

நான் அந்த மாதிரி தான்
தொடர்ந்து பேசியுள்ள ராஜமெளலி, ஆர்ஆர்ஆர் படத்தில் நான் சித்தரித்துள்ளது பல யுகங்களாக இருக்கும் வாழ்க்கை முறையைத்தான். ராஜு என்ற பாத்திரம் துறவியாக மாறும் காட்சியை குறிப்பிட்ட ராஜமெளலி "ராஜு பகவத் கீதையில் இருந்து சமஸ்கிருத வசனத்தை ஓதுகிறார். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொன்ன விஷயமாக இதைப் பார்க்கலாம், எனவே இது ஒரு இந்து மத வசனம், ஆனால் நீங்கள் அதன் பொருளைப் பார்த்தால், ஜாதி, எங்கு பிறந்தார் என்பதை பொருட்படுத்தாமல் இந்தியர்களுக்காக கற்பிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது, நீங்கள் செய்யும் செயலின் பலனைப் பார்ப்பது அல்ல. அதைத்தான் இந்து தர்மம் சொல்கிறது. அதனால், நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவன் தான்" என வெளிப்படையாக கூறினார்.


Click it and Unblock the Notifications











