நா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. ‘பேரன்பு’ விழா மேடையில் ராம் உருக்கம்
பேரன்பு படப்பாடல்கள் வெளியீட்டு விழாவில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குறித்து உருக்கமாகப் பேசினார் இயக்குநர் ராம்.
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் இடத்தை, வேறு யாராலும் நிரப்ப முடியாது என பேரன்பு படப் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராம் உருக்கமாகத் தெரிவித்தார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என தமிழ் சினிமாவிற்கு சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குநர் ராமின் அடுத்த படைப்பு பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது.
இதில் மம்மூட்டி, அஞ்சலி, 'தங்கமீன்கள்' சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல்கள் வெளியீடு:
இத்திரைப்படத்தின் பாடல்களும், முன்னோட்டக் காட்சிகளும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர்கள் ராம், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், நடிகர்கள் சித்தார்த், மம்மூட்டி, நடிகை அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நா.முத்துக்குமார்:
அப்போது விழா மேடையில் பேசிய ராம், "பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இல்லாமல் வெளியாகும் என் முதல் படம் இது. தமிழ் உள்ளவரை நா.முத்துக்குமார் இருப்பார். என் மனைவி சுமதி ராம் இப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

20 ஆண்டுகள்:
90களில் மம்மூட்டி நடித்து வெளியான படம் சுகிர்தம். அப்போது எனக்கு 12 வயது. சுகிர்தம் தான் மம்மூட்டி நடித்து நான் பார்த்த முதல் திரைப்படம். நான் இயக்குநர் ஆனால் நிச்சயம் அவரை வைத்து படம் இயக்குவேன் என அப்போதே நினைத்தேன். எனது ஆசை நிறைவேற 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.

உதவி இயக்குநர்கள்:
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. என் உதவி இயக்குநர்கள் இல்லாமல் நான் இல்லை" என உருக்கமாகப் பேசினார்.

4 பாடல்கள்:
இயற்கை விதவிதமாகப் படைத்து, அனைத்தையும் சமமாகப் பாவிக்கிறது என்ற நோக்கத்தோடு தயாராகியுள்ள ‘பேரன்பு' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மொத்தம் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில், கவிப்பேரரசு வைரமுத்து, சுமதி மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

சர்வதேச திரைப்பட விழாக்கள்:
இந்த படம், 'பெர்லீன்' மற்றும் 'வெனீஸ்'உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பாராட்டுக்களை பெற்றுள்ளது. உலகத் திரைப்பட விழாக்களில் மிகவும் மதிப்புடையதாகக் கருதப்படும் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு-வின் உலகத்திற்கான முதல் காட்சி திரையிடப்பட்டது. விருதுப் பிரிவில் போட்டியிட்ட 187 படங்களில் பார்வையாளர்களின் வாக்கிற்கு இணங்க பேரன்பு 20 ஆவது இடத்தைப் பிடித்தது. 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியப் படம் பேரன்பு என்பது குறிப்பிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











