'தங்கமீன்கள்' ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி நடிக்கும் 'பேரன்பு'
சென்னை: தேசிய விருது வென்ற இயக்குநர் ராம் தனது அடுத்த படத்திற்கு பேரன்பு என்று பெயரிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து அஞ்சலி நடிக்கிறார்.
ஜீவா நடித்த 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராம், அடுத்து இயக்கிய தங்க மீன்கள் படம் மூலம் தேசிய விருதைக் கைப்பற்றினார்.

இடையில் 2 வருடங்கள் எந்தப் படமும் இயக்காமல் இருந்த ராம் தற்போது பேரன்பு என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி மற்றும் 'தங்க மீன்கள்' புகழ் சாதனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
முழுக்க, முழுக்க அன்பை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் மம்முட்டி ஒரு குழந்தையின் தந்தையாக நடிக்கிறார். அஞ்சலி இந்தப் படத்தில் நடித்தாலும் மம்முட்டிக்கு ஜோடி கிடையாதாம்.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலிலும், 2 வது கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் நடத்த இயக்குநர் ராம் திட்டமிட்டு இருக்கிறார்.
வந்தே மாதரம் படத்திற்குப் பின்னர் 6 வருடங்கள் கழித்து மம்முட்டி தமிழில் நடிக்கும் படமே பேரன்பு. தங்கமீன்கள் படத்திற்குப் பின்னர் 2 வருடங்கள் கழித்து ராம் இயக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மற்றொருபுறம் ஆண்ட்ரியா - ரவி வசந்த் நடிப்பில் தரமணி என்ற படத்தையும் ராம் இயக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











