பாபா ரீ ரிலீஸ் செய்ய 2K கிட்ஸ் தான் காரணம்: ரஜினி சொன்ன சீக்ரெட்… போட்டுடைத்த சுரேஷ் கிருஷ்ணா
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 12ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாபா ரீ-ரிலீஸ் செய்யப்படுவது குறித்து அந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.

ரஜினியின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. 2002ம் ஆண்டு வெளியான பாபா படத்திற்கு ரஜினியே கதை, திரைக்கதை எழுதி அவரே தயாரித்து இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களை தொடர்ந்து, சுரேஷ் கிருஷ்ணா பாபா படத்தை இயக்கினார். ரஜினியுடன், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், கருணாஸ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதேபோல், ஏஆர் ரஹ்மான் பாபா படத்திற்கு இசையமைத்தார். இந்தப் படம் ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்தின் முடிவு தான்
இந்நிலையில், பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது ஏன் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மனம் திறந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் அவர் கொடுத்திருந்த பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அதில், "ரஜினி எனக்கு சில நாட்கள் முன் போன் செய்து பாபா படத்தின் ஹார்ட் டிஸ்க் அனுப்புறேன் பாருங்க எனக் கூறியிருந்தார், நானும் பார்த்தேன். 2 நாட்களுக்கு பின்னர் மீண்டும் என்னை அழைத்து படம் எப்படி இருந்துச்சு என ரஜினி கேட்டார். நான் அப்பவே எனக்கு இது பிடிச்ச படம் சார் என சொல்லவும், அவர் இதை ரீ-ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்" எனக் கூறினார்.

2K கிட்ஸ் தான் காரணம்
அதற்கு பதிலளித்த சுரேஷ்கிருஷ்ணா, "சமீபகாலமாக பேன்டசி படங்கள் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. காந்தாரா, பிரம்மாஸ்திரா போன்ற படங்களை இதற்கு உதாரணமா சொல்லலாம். 2கே கிட்ஸ் எல்லாம் பாபா படத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். இருபது வருடங்களுக்கு முன்னாடி இப்படி ஒரு பேன்டசி கதையை பண்ணுவதே அபூர்வமான நிலையில், கண்டிப்பா இப்ப பார்த்த புது வெர்ஷனா இருக்கும்" என ரஜினியிடம் கூறினாராம். அதன்பின் 3 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் எடிட் செய்து தற்போதைய டெக்னாலஜிக்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. இந்த படத்தில் எந்த தப்புமே இல்லை. ஆனால் அன்றைக்கு எழுந்த சர்ச்சைகளால் பாபா படத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்ப பாபா ரீ-ரிலீஸ் செய்தால் கண்டிப்பா எல்லாரிடமும் வரவேற்பு பெறும் என சுரேஷ்கிருஷ்ணா கூறியுள்ளார்.

வெற்றிபெறுமா பாபா?
மகா அவதார் பாபாஜியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாபா பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், ரஜினியின் பாபா முத்திரை ரொம்பவே பிரபலம் ஆனது. அதேபோல், வழக்கம் போல ரஜினியின் ஸ்டைலும் மாஸ் காட்டியது. நெகட்டிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸிலும் தடுமாறிய பாபா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது. அதன் பின்னர் ரஜினியும் அவர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொன்னதை போல பாபா திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











