கிஷோர் இல்லாமல் என் படங்கள் முழுமை அடையாது... இயக்குநர் வெற்றிமாறன் வேதனை
சென்னை: எடிட்டர் கிஷோர் இல்லாமல் தனது படங்கள் முழுமை அடையாது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படத்தில் எடிட்டராக பணியாற்றியவர் கிஷோர். இப்படத்திற்காக கிஷோருக்கு தேசிய விருது கிடைத்தது.
ஆடுகளத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் படங்களின் எடிட்டராக கிஷோர் பணியாற்றி வந்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் விசாரணை படத்தில் எடிட்டராக பணிபுரிந்து வந்த போது தான், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை...
கிஷோரின் இழப்பு குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், ‘என்னுடைய 'விசாரணை' படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது தான் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

சாப்பிடாததால் மயக்கம்...
"சாப்பிடாமல் இருந்ததால் தான் சோர்வாக இருக்கிறது. சரியாகிவிடுவேன் சார்" என்று கிஷோர் கூறினார்.

மூளையில் ரத்த உறைவு...
ஆனால் தலைதான் வலிக்கிறது என்று கூறியவுடன் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த போது தான் மூளையில் ரத்த உறைவு கண்டுபிடித்து ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்கு பிறகு நடந்தவை உங்களுக்கே தெரியும்.

நெருக்கமான நண்பர்...
எடிட்டர் கிஷோர் என்னுடைய படங்களில் பணிபுரிபவர் என்பதை எல்லாம் தாண்டி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவருடைய பணிகளால் என்னுடைய படங்களை முழுமையடைய வைத்தார்.

முழுமை அடையாது...
அவருடைய மறைவால் இனிமேல் என்னுடைய படங்கள் யாவும் முழுமை அடையாமல் தான் இருக்கும்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











