இதெல்லாம் சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... நட்சத்திர கிரிக்கெட் வதந்திகள் குறித்து விஷால் விளக்கம்!
சென்னை: நட்சத்திர கிரிக்கெட் தொடர்பாக தான் கூறியதாக வெளியான சர்ச்சைக்குரிய பேட்டி உண்மையில்லை, வதந்தி என நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக கடந்த ஞாயிறன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுக்கவில்லை.
இதனால், போட்டி நடைபெற்ற இடத்தில் பெரும்பாலான சேர்கள் காலியாகவே இருந்தன.

அஜித் பாடலுக்கு தடை...
போட்டி நடைபெற்ற போது, மைதானத்தில் அஜித் நடித்த வேதாளம் படப்பாடலான ஆலுமா டோலுமா ஒலிபரப்பப் பட்டதாகவும், அதனை நடிகர் விஷால் உடனடியாக நிறுத்தச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.

பழிக்குப் பழி...
ஏற்கனவே, நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அஜித் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பழி வாங்கும் விதமாகவே அவரது பாடலை பாதியில் விஷால் நிறுத்தியதாக செய்தி வெளியானது.

பேட்டி...
அதுமட்டுமின்றி, நட்சத்திர கிரிக்கெட் போட்டி தோல்வியடைந்ததற்கு தமிழக மக்களே பொறுப்பு என விஷால் கூறியதாக பேட்டி ஒன்று உலா வந்தது. இதைக் கண்டு ரசிகர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர்.

கண்டனங்கள்...
இவற்றின் தொடர்ச்சியாக விஷால் குறித்தும் நடிகர் சங்கம் குறித்தும் விதவிதமான மீம்ஸ்களும், கண்டனப் பதிவுகளும் சமூகவலைதளப் பக்கங்களில் உலா வந்தன.
டிவிட்டரில் விளக்கம்...
இந்நிலையில், இவற்றிற்கு தற்போது நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு செய்தி, நான் அஜீத்தின் பாடலை நிறுத்தச் சொன்னதாகக் கூறுகிறது. இன்னொன்றில், நான் சொன்னதாக ஓர் அபத்தமான பேட்டி வெளியாகியுள்ளது.

சிறுபிள்ளைத்தனமானது...
இவை மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. நான் சொல்லாத ஒன்றை எப்படி என்னுடைய கருத்தாகப் பிரசுரிக்கலாம்" என விஷால் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











