கேஜிஎஃப் வெற்றிக்கு இது தான் காரணம்...இப்படியெல்லாம் பண்ணினா ஏன் 1000 கோடி வசூல் ஆகாது
சென்னை : டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 படம் இன்று அல்லது நாளை 1000 கோடி வசூல் கிளப்பில் இணைய உள்ளது. அடிப்படையில் பார்த்தால் ரொம்ப சாதாரண டானின் கதை தான். இந்த படம் எப்படி இப்படி ஒரு வசூல் சாதனையை படைத்தது என்பது தான் அனைவருக்கும் இருக்கும் ஆச்சரியம்.
ஒரு ஏழை சிறுவன் தனது தாயின் கனவை நிறைவேற்ற எப்படி இந்தியாவையே மிரட்டும் பெரிய மான்ஸ்டராக, பணக்காரன் ஆகிறான் என்று கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களின் கதையை ஒரே வரியில் சொல்லி விடலாம். ஆனால் இந்த படம் எப்படி பல வசூல் சாதனைகளை முறியடித்து, இத்தனை பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது என்ற கேள்விக்கு பதில் தெரிய டைரக்டர் பிரசாந்த் நீல் பற்றிய ஒரு பிளாஷ்பேக்கை பார்த்தால் புரியும்.

3 ஆண்டுகள் கடும் உழைப்பு
கேஜிஎஃப் படத்தை இயக்குவதற்கு முன் பிரசாந்த் நீல், உக்ரம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அப்போதே கேஜிஎஃப் படத்திற்கான கதையை முடிவு செய்து வைத்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் பிரசாந்த் நீலுக்கு பல படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்ததாம். அவற்றை எல்லாம் வேண்டாம் என ஒதுக்கி விட்டு, பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கியே தீர வேண்டும் என்பதற்காக கிட்டதட்ட 3 ஆண்டுகள் உழைத்து தான் கேஜிஎஃப் முதல் பாகத்திற்கான கதையை உருவாக்கி உள்ளார்.

முன்னாடியே முடிவு பண்ணிட்டாரா
கேஜிஎஃப் படம் இயக்கும் போதே இரண்டாம் பாகத்தில் அதீரா கேரக்டரை கொண்டு வர வேண்டும். அதில் சஞ்சய் தத் தான் நடிக்க வேண்டும் என பிரசாந்த் முடிவு செய்து விட்டாராம். இருந்தாலும் கேஜிஎஃப் படத்திற்கு மக்களிடம் எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்க்க காத்திருந்தாராம். இந்த படம் பெரிய ஹிட் ஆனதற்கு பிறகு சஞ்சய் தத்தை சந்தித்து கேஜிஎஃப் 2 படத்தில் நடிக்க கேட்டுள்ளார். அவரும் ஓகே சொல்லி விட்டாராம்.

எதுக்கு இந்த கப்பல் சீன்
ஆனால் இரண்டு பாகங்களின் கதையிலும், ஏதோ ஹீரோவின் மாசை காட்ட வேண்டும். மிகைப்படுத்தி சொல்லி வேண்டும். ஏதோ ஸ்கிரிப்டிற்காக வைக்க வேண்டும் என எந்த ஒரு விஷயத்தையும் பிரசாந்த் நீல் சேர்க்கவில்லையாம். ஒவ்வொரு சீனுக்காகவும் இந்திய வரலாற்றில் மிக பெரிய ஆராய்ச்சியே நடத்தி உள்ளாராம். இதற்கு உதாரணமாக கேஜிஎஃப் 2 படத்தின் க்ளைமாக்சில் வரும் இந்தோனேஷிய கப்பலை சொல்லலாம். எதற்காக இந்தோனேஷிய கப்பல் வருகிறது சம்பந்தமே இல்லாம என்று கூட பலர் யோசித்திருக்கலாம்.

இப்படி ஒரு கதை இருக்கே
கேஜிஎஃப் 2 படத்தின் கதை 1970, 80 களில் நடப்பதை போல் காட்டப்பட்டிருக்கும். அதற்கு முன் இந்திய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் 1960 க்கு பிறகு ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இந்தோனேஷியா இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தாலும் டச்சுக்காரர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் மலேசியா தனி நாடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. மலேசியாவிற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இதை விரும்பாத இந்தோனேஷியா, ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவிற்கு பல வகையிலும் இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனால் சில காலம் இந்தியா - இந்தோனேஷியா இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.

யப்பா...என்ன ஒரு ஆராய்ச்சி
இந்த வரலாற்று பதிவை பயன்படுத்தி தான் இந்திய அரசிடம் இருந்து ராக்கி பாய் தப்பிப்பதற்காக இந்தோனேஷிய அரசு உதவுவதாக சாப்டர் 3ல் காட்ட உள்ளனர். இந்தோனேஷிய நீர்மூழ்கி கப்பல் மூலம் ராக்கி தப்பி செல்வதாக காட்ட உள்ளனர். நீர்மூழ்கி கப்பல் மூலம் தப்பி செல்வதெல்லாம் நம்பும் படியாகவா உள்ளது என்று கேட்கலாம். அதற்கும் பதில் வைத்துள்ளார் பிரசாந்த் நீல். இதற்கு முன் ரஷ்யாவில் இப்படி ஒரு டான், அரசின் நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தி தப்பி சென்றுள்ளான். பிறகு அவனை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த டானை சந்தித்த டைரக்டர், அவனின் அனுபவங்களை கேட்டு அப்படியே ரஷ்ய மொழிகளில் படமாக எடுத்துள்ளார். இதை வைத்து தான் இப்படி ஒரு சீனை பிரசாந்த் நீல் பிளான் பண்ணி உள்ளாராம்.
Recommended Video

அப்புறம் ஏன் 1000 கோடி வசூல் ஆகாது
அடுத்தடுத்த பாகங்களில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் குறித்து முன்பே ஆராய்ச்சி செய்து, யோசித்து வைத்து, பிளான் பண்ணி பண்ணுகிறார் பிரசாந்த் நீல். கடுமையாக உழைத்து கதையை கணகச்சிதமாக உருவாக்கி, படமாக்குவதால் தான் இவரின் படங்கள் இந்த அளவிற்கு வெற்றி பெற்று வருகின்றன. முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான கேரக்டர்களை முடிவு செய்து வைத்தது தான் கேஜிஎஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம்.


Click it and Unblock the Notifications











