பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம் வெளியீடு - எம்எஸ்வி, இளையராஜா பங்கேற்கிறார்கள்!
மக்கள் கவிஞர் என்று கொண்டாடப்படும், அமர கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் இன்று சென்னையில் வெளியாகிறது.
இந்த ஆவணப் படத்தை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா வெளியிட, பட்டுக்கோட்டையார் மனைவி கவுரம்மாள் கல்யாணசுந்தரம் பெற்றுக் கொள்கிறார்.

தனது 29 வயதிலேயே மரணத்தைத் தழுவியவர் பட்டுக்கோட்டையார் எனப்படும் கல்யாணசுந்தரம். பாவேந்தர் பாரதிதாசனின் சீடர்.
வெறும் நான்கு ஆண்டுகள் மட்டும்தான் தமிழ் சினிமாவில் அவர் பாடல்கள் எழுதினார். ஆனால் எழுதிய ஒவ்வொரு பாடலும் தமிழ் சினிமாவின் வைரங்களாக ஜொலித்தன. இவர் மாதிரி எளிய, ஆனால் கருத்தாழமிக்க பாடல்களைத் தந்தவர் யாருமில்லை என கண்ணதாசனும் வாலியும் கொண்டாடுவார்கள்.
அமரர் எம்ஜிஆரின் 7 சூப்பர் ஹிட் படங்களுக்கும், நடிகர் திலகம் சிவாஜிக்கு 11 படங்களுக்கும் பாடல்கள் புனைந்தவர் பட்டுக்கோட்டையார்.
1959-ல் மைக்ரேன் எனப்படும் கடுமையான நோயில் சிக்குண்டு, இறந்தார் கல்யாணசுந்தரம். ஆனால் அவர் மரணித்து 55 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவரது பாடல்கள் இன்னமும் வீறு கொண்டு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பட்டுக்கோட்டையார் பற்றிய முழுமையான ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனை வெளியிடும் முயற்சியில் பெரும் ஊக்கமும் ஆர்வமும் காட்டியவர் இசைஞானி இளையராஜா.
இன்று மாலை வாணி மகாலில் நடக்கும் நிகச்சியில் அவரும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனும் இந்த ஆவணப்படத்தை வெளியிட, பட்டுக்கோட்டையாரின் மனைவி கவுரவம்மாள் கல்யாணசுந்தரம், ஆவணப்படத்தை பெற்றுக் கொள்கிறார். பட்டுக்கோட்டயாரின் வாரிசு மற்றும் உறவினர்கள், திரையுலகினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











