ரஜினி படத்துடன் போட்டி போடுவது தற்கொலைக்கு சமம்! - கேயார்
ரஜினி படங்களுடன் போட்டி போடுவது தற்கொலைக்குச் சமமானது என்றார் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
கிளாப் போர்டு மூவிஸ் சார்பில் வினாயக் பெரும் பொருட்செலவில் தயாரித்து, நடிக்கும் படம் ‘மகாபலிபுரம்'. இப்படத்தில் அங்கனா ராய், கருணா, ரமேஷ், வெற்றி கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தை டாண் சேண்டி இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் வெளியிடவுள்ளது.
முகமூடி, யுத்தம் செய் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள கே இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கேயார், இயக்குனர்கள் பிரபு சாலமன், ஆர்.வி.உதயகுமார், துரை, நடிகர்கள் விஜய் சேதுபதி, சிபிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாடல்களை கேயார் முன்னிலையில் பிரபு சாலமன் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

கேயார் பேச்சு
பின்னர் கேயார் பேசும்போது, "படத்தை எடுப்பது கஷ்டம் என்ற காலம் போய் இப்போது, அதை ரிலீஸ் செய்வதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஸ்டுடியோ 9 போன்ற நிறுவனங்கள்தான் நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிட்டு அந்த படங்களுக்கு ஒரு அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கிறது.

ரஜினி படத்துடன் மோதுவது தற்கொலைக்கு சமம்
அதேபோல் படங்களை வெளியிடுவதிலும் ஒரு திட்டமிடல் வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் வெளியாகும் போது சிறு பட்ஜெட் படங்களை அது கூட மோத விட வேண்டாம். அது சரியான முடிவும் கிடையாது. அது தற்கொலைக்கு சமமானது.

ரஜினி படத்தைத்தான் பார்ப்பார்கள்
இப்ப ரஜினி படம் வருதுன்னா மக்கள் அதைத்தான் பார்க்க விரும்புவாங்க. அதனால், சிறு பட்ஜெட் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் வசூல் கிடைக்காது.

வீரம், வேலையில்லா பட்டதாரி
இந்த வருடம் வெளியான படங்களிலேயே ‘வீரம்', ‘வேலையில்லா பட்டதாரி' ஆகிய 2 படங்கள்தான் வணிக ரீதியில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.

சதுரங்க வேட்டைக்கு வசூல் இல்லையே..
சமீபத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை' படம் நல்ல படத்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்பது வருத்தம்தான்," என்றார்.


Click it and Unblock the Notifications











