சின்மயி மன்னிப்பு கேட்டால் மீண்டும் சேர்ப்போம்... டப்பிங் யூனியன் நிபந்தனை!
பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் மீண்டும் சேர மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பாடகி சின்மயி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சங்கத்தில் மீண்டும் சேர்வது குறித்து பரிசீலிக்கப்படும் என டப்பிங் யூனியன் அறிவித்துள்ளது.
கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி மீது புகார் கூறி பரபரப்பை கிளப்பியவர் பாடகி சின்மயி. இதையடுத்து, தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கிவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் டப்பிங் யூனியன் பொருளாளர் ராஜ்கிருஷ்ணா தலைமையிலான நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாடகி சின்மயி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது,
"பாடகி சின்மயியை நாங்கள் சங்கத்தில் இருந்து நீக்கவில்லை. இரண்டு வருடங்களாக சின்மயி சந்தா பணம் கட்டாததால் தான் அவரது உறுப்பினர் அட்டை தானாக காலாவதியானது. இது சங்கத் தேர்தலை நடத்திய வழக்கறிஞர் வாசுகி எடுத்த முடிவு.
காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் நடிகர் ராதாரவி மீது பழிசுமத்தி வருகிறார். அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்து, உறுப்பினர் கட்டணத்தை செலுத்தினால் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்.

எந்தவொரு திரைப்படத்துக்கு டப்பிங் பேசுவதாக இருந்தாலும், அது யூனியன் மூலமாக தான் நடைபெற வேண்டும். அதற்கென தனிப்பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். சம்மந்தப்பட்ட டப்பிங் ஆர்டிஸ்டுகளுக்கு வாய்ப்பு வாங்கி தருவது முதல் பணம் பெற்று தருவது வரை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அப்படி அவர்கள் பணம் பெற்று தரும்போது, சங்கத்துக்கு 5 சதவீதமும், அவர்களுக்கு 5 சதவீதமும் என 10 சதவீதப் பணம் பிடித்தம் செய்து கொள்ளப்படும். இது தான் விதிமுறை.
ஆனால் இந்த விதிமுறைகளை சின்மயி பின்பற்றுவதில்லை. தானாகவே சென்று டப்பிங் பேசுகிறார். மாயவன், 96 ஆகிய படங்களுக்கு தன்னிச்சையாக டப்பிங் பேசியிருக்கிறார். இதற்காக ஒவ்வொரு படத்துக்கும் 3 லட்சம் வீதம் பணம் பெற்றுள்ளார்.
நடிகர்கள் விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, நாசர் உள்பட பிரபல நடிகர்கள் கூட தாங்கள் நடித்த படங்கள் தவிர்த்து வெளிப்படங்களுக்கு டப்பிங் பேசும் போது, சங்கத்தின் மூலம் தான் செய்கிறார்கள். இவர் மட்டும் ஏன் இந்த விதிமுறையை மீறுகிறார். அவர் தானாக வந்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால், சங்கத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்" என அவர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications











