Dude: டியூட் படத்தில் கவின் ஆணவப்படுகொலை ஏற்படுத்திய தாக்கம்.. இயக்குநர் சொன்ன பகீர் தகவல்!
சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் டியூட். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் முதல் ஐந்து நாளில் ரூபாய் 95 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று படக்குழு நடத்திய நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதாவது, " டியூட் படத்திற்கு இப்படி ஒரு ஓப்பனிங்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி. படம் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளை வசூலித்துள்ளது. 100 கோடிகளை எளிதில் கடந்துவிடும். இதைப் பார்க்கும்போது, இந்த படத்திற்கு இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. டியூட் படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருமே சொல்லாத விஷயத்தை நாங்கள் சொன்னதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் ( தந்தை பெரியார்) இருந்தார், அவரைப் போன்றவர்கள் சொன்னதைதான் அடுத்த தலைமுறையாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிதல்ல. இன்னமும் சொல்லுவோம் என்றார்.

கவின் ஆணவப்படுகொலை: அதேபோல், டியூட் போன்ற படத்தின் கதையை பேசுவது என்பது மொத்த டீமிற்குமான பங்கு உள்ளது. படத்தில் சில டயலாக்குகள் எல்லாம் நன்றாக இருந்தால் யார் அது குறித்து என்னிடத்தில் பேசுகிறார்களோ இல்லையோ, நடிகர் பிரதீப் ரங்கநாதன் வந்து, " இதெல்லாம் நாம் சொல்லியே ஆகவேண்டும் என்று சொல்லி சொல்லி உற்சாகப் படுத்திக் கொண்டே இருப்பார். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான், திருநெல்வேலி கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். அவரது ஆணவப்படுகொலை எங்கள் மொத்த டீமையும் உலுக்கிவிட்டது. அதனால்தான் படத்தில் நாங்கள் ஒரு வசனத்தை வைக்க ( உங்களுக்குள்ள சாதி ஆணவம் இருந்தா, நீங்க போய் சாவுங்கடா) அந்த சம்பவமும் ஒரு காரணமாக இருந்தது.

மையக் கதை: அதேபோல் ஒரு பெண்ணுக்கு அவரது துணையைத் தேர்வு செய்யும் உரிமை அந்த பெண்ணின் அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ, உறவினருக்கோ, நண்பருக்கோ இல்லை. அந்த உரிமை அந்த பெண்ணுக்கு மட்டும் தான் உள்ளது. இதுதான் டியூட் படத்தின் மையக் கதை. இதை மக்கள் ஏற்றுக் கொண்டு இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்தது மகிழ்ச்சி" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











