வாரிசு, துணிவு ஒரே நாளில் ரிலீஸ்... FDFS எப்போது... மெயின் ஸ்க்ரீன் யாருக்கு?: பரபரப்பில் ரசிகர்கள்
சென்னை: விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன.
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய், அஜித் திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு ஒரேநாளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தககது.
மேலும், துணிவு, வாரிசு திரைப்படங்களின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில், இரண்டு படங்களுமே ஒரேநாளில் வெளியாக உள்ளதால் திரையரங்குகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வாரிசு - துணிவு மோதல்
இந்தாண்டு பொங்கல் பண்டிகை விஜய் - அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. விஜய்யின் வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகின்றன. இரண்டு படங்களின் ட்ரெய்லரும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், வாரிசு, துணிவு இரண்டுமே வரும் 11ம் தேதி ரிலீஸ் என தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இதனால் இப்போது இருந்தே இருதரப்பு ரசிகர்களும் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர்.

தொடங்கியது FDFS பஞ்சாயத்து
வாரிசு, துணிவு இந்த இரண்டில் எந்த படத்துக்கு அதிகமான ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்படும் என பஞ்சாயத்து கிளம்பியது. அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் வெளியிடுவதால் இந்த சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் வாரிசு, துணிவு இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது இன்னொரு வடிவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் முதல் நாளில் 4 மணி காட்சிகளுடன் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அதேபோல், வாரிசு, துணிவு இரண்டு படங்களின் FDFS அதிகாலை 4 மணிக்கா அல்லது இரண்டு மணிக்கே தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மெயின் ஸ்க்ரீன் யாருக்கு?
இதில் விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 2 மணிக்கே திரையிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சத்யம் தியேட்டர்ஸ் போன்ற மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில், ஒரு ஸ்க்ரீன் மட்டுமே பெரியதாக இருக்கும். அதனால் அந்த பெரிய ஸ்க்ரீனில் விஜய், அஜித் இருவரில் யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நகரங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் அதிகம் வந்துவிட்டதால், இப்போது இதுவும் பெரிய தலைவலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரெடியாகும் திரையரங்குகள்
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கடந்தாண்டு திரையுலகுக்கு கொஞ்சம் ஆரோக்கியமானதாக அமைந்தது. வலிமை, பீஸ்ட், விக்ரம், பொன்னியின் செல்வன், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப், காந்தாரா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் வசூலில் சாதித்தன. அதேபோல் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இந்தப் படங்கள் பெரிய நம்பிக்கையை கொடுத்தன. இதன் தொடர்ச்சியாக 2023ம் ஆண்டும் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களுடன் ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள திரையரங்குகளும் இப்போது திருவிழா போல களைக்கட்டத் தொடங்கிவிட்டன. மேலும், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள், பவுன்சர்கள் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் திரையரங்க உரிமையாளர்கள் தொடங்கிவிட்டன. இந்நிலையில் விரைவில் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











