அந்த ஹீரோயின் பற்றி தவறாகச் சொன்னேனா..? நடிகை பார்வதி புகாருக்குப் பிரபல நடிகர் விளக்கம்!
கொச்சி: அந்த ஹீரோயின் பற்றி தான் தவறாக ஏதும் கூறவில்லை என்று நடிகை பார்வதியின் புகாருக்கு பதில் அளித்துள்ளார் பிரபல நடிகர்.
மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வுக்கு நிதி திரட்ட, சில வருடங்களுக்கு முன் டிவென்டி 20 என்ற படம் தயாரிக்கப்பட்டது.
இதில் பெரும்பாலான மலையாள நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட நடிகை
இப்போதும் சங்கத்துக்கு நிதி திரட்ட, அந்த படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளனர். இதுபற்றி பேட்டியளித்த நடிகர் சங்க செயலாளரான இடைவேளை பாபுவிடம், இதில் முதல் பாகத்தில் நடித்த, கடத்தப்பட்ட அந்த நடிகை இடம்பெறுவாரா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் பரபரப்பாகப் பேசினார்.

ஆவேச பார்வதி
அப்போது நடிகர் சங்கத்தில் அந்த நடிகை தற்போது உறுப்பினராக இல்லை. இறந்த ஒருவர் எப்படி திரும்ப வர முடியும்? என்று கேட்டார். அவர் இப்படி சொன்னது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆவேசமான நடிகை பார்வதி, அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பெங்களூர் நாட்கள்
தமிழில், பூ மூலம் அறிமுகமானவர் பார்வதி. அடுத்து தனுஷூடன் மரியான், கமலுடன் உத்தமவில்லன், ஆர்யா, ராணா நடித்த பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதுபற்றி பார்வதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பவதாவது:

சங்கத்தை சீரமைக்க
2018 ஆம் ஆண்டு என் தோழிகள் நடிகர் சங்கத்தில் இருந்து விலகினாலும் நான் விலகவில்லை. சங்கத்தை சீரமைக்க சிலராவது இருக்க வேண்டுமே என்று நினைத்தேன். இடைவேளை பாபுவின் பேட்டியை பார்த்த பிறகு, இங்கு மாற்றம் வரும் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. நடிகர் சங்கத்தால் கைவிடப்பட்ட பெண் உறுப்பினரை, இறந்தவருடன் ஒப்பிட்டது மிகவும் மோசமானது, அருவெறுப்பானது. இவ்வாறு கூறியிருந்தார்.

புதிய அர்த்தம்
இடைவேளை பாபு, இந்த பேச்சுக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது பரபரப்பானது. இந்நிலையில் நடிகை பார்வதியின் புகார் பற்றி இடைவேளை பாபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: நான் சொன்னதற்கு புதிய அர்த்தத்தை கண்டால் என்னால் எதுவும் செய்ய முடியாது.

என்ன சொல்வது?
டிவென்டி 20 படத்தின் அடுத்த பாகத்தில் பாதிக்கப்பட்ட அந்த நடிகை நடிப்பாரா என்று என்னிடம் கேட்கப்பட்டது. இறந்து போன ஒருவர் படத்தில் எப்படி இடம்பெற முடியும் என்று சொன்னேன். அதாவது, முதல் பாகத்தில் அவர் கேரக்டர் இறந்துவிட்டதைதான் சொன்னேன். இதற்கு வேறு அர்த்தங்களை எடுத்துக்கொண்டால் நான் என்ன சொல்வது? மேலும் அவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை.

தோழியாக பார்க்கிறேன்
நான் அந்த நடிகையை பற்றி ஏன் மோசமாக பேச வேண்டும்? அவரை என் தோழியாகத்தான் பார்க்கிறேன். எந்த இடத்திலும் நான் பெண்களை அவமரியாதையாக பேசியதில்லை. என் வார்த்தைகளை திசைத் திருப்ப முயன்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. நடிகை பார்வதி, நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நடிகை பார்வதி அல்ல
நடிகர்கள் சங்கத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் அதைச் சொன்னால் நான் ராஜினாமா செய்கிறேன். ஒட்டிக் கொண்டு இருக்கவில்லை. என்னை தேர்வு செய்திருப்ப வர்கள் அதை சொல்ல வேண்டும். நடிகை பார்வதி அல்ல' இவ்வாறு இடைவேளை பாபு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











