திருட்டு சிடி தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்... எச்சரிக்கும் லைக்கா!
சென்னை: தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் திருட்டு சிடியைக் கட்டுப்படுத்த லைக்கா நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
டார்லிங் புகழ் சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

திருட்டு சிடி
இப்போதெல்லாம் படம் வெளியாகும் நாளிலேயே அப்படத்தின் திருட்டு சிடியும் வெளியாகி விடுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு சிடியை ஒழிக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றாலும் கூட அதனால் பெரிய நன்மைகள் எதுவும் உண்டாகவில்லை.

லைக்கா
இந்நிலையில் லைக்கா நிறுவனம் திருட்டு சிடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது. நாளை வெளியாகும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திற்கு ட்ரேட்மார்க் பதிவு ஒப்புதல் எண்ணை (O-0000780028) அறிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து இந்நிறுவனம் வாங்கியுள்ளது.

தரவிறக்கம்
இப்படத்தை யாராவது பதிவேற்றம் மற்றும் தரவிறக்கம் செய்தால் அவர்கள் மீது லைக்கா நிறுவனம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். திரையுலகில் இதனை புது முயற்சி என்று கூறியிருக்கும் லைக்கா இதன் மூலம் திருட்டு சிடி தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளது.

24
சமீபத்தில் சூர்யாவின் 24, ஜி.வி.பிரகாஷின் பென்சில் மற்றும் சிம்புவின் இது நம்ம ஆளு ஆகிய படங்களுக்கு வெளியான இரண்டொரு நாட்களிலேயே திருட்டு சிடி வெளியாகி விட்டது. இந்த 3 படங்களின் தயாரிப்பாளர்களுமே இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பின் அந்தப் புகாரின் நிலை என்ன? அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? போன்ற விவரங்களை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடவில்லை. திரையுலகினர் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications











