1009 வாரமாக உள்ளத்தை அள்ளிய "தில்வாலே".. இன்றே கடைசி... மராத்தா மந்திரில்!
மும்பை: புதிய திரைப்படங்களைத் திரையிட வேண்டும் என்ற காரணத்திற்காக, கடந்த இருபது வருடங்களாகத் திரையிடப்பட்டு வந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தைத் தூக்க மும்பை திரையரங்கம் முடிவு செய்துள்ளது.
யாஷ் சோப்ரா தயாரிப்பில் ஷாரூக் கான், காஜோல் நடித்த வெற்றிப்படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'. 1995-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம், இந்தியத் திரையுலகில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. ஷாரூக் மற்றும் கஜோல் இருவருக்குமே இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்தது.
இப்படம் மும்பையில் உள்ள 'மராத்தா மந்திர்' என்ற திரையரங்கில் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.

சாதனை...
கடந்த டிசம்பர் மாதம் இத்தியேட்டரில் இப்படம் தனது 1000-வது வாரத்தைக் கொண்டாடியது. இதன்மூலம், ஒரே தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.

புதிய திரைப்படங்கள்...
தினந்தோறும் காலை 11.30 மணி காட்சியில் இந்தப் படம் திரையிடப்படுவதால், ஒவ்வொரு வாரமும் வெளியாகும் புதுப் படங்களை, மீதமுள்ள 3 காட்சி நேரங்களில் திரையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆலோசனை...
இதனால், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸுடன் கலந்தாலோசித்து, இனி இப்படத்தை திரையிட வேண்டாம் என திரையரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதலில் காலை 11.30 மணிக்கு பதில், காலை 9.15 மணிக்கு ஒரு காட்சியை திரையிடலாம் என ஆலோசிக்கப் பட்டது. ஆனால், பணியாளர்களின் வேலை நேரம் அதிகமாகும் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

இன்றே கடைசி...
இதனால் தற்போது 1009-வது வாரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் 'தில்வாலே', இன்றே கடைசியாகத் திரையிடப்பட்டது. இந்தக் கடைசிக் காட்சியில் 210 ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்தனர்.

டுவிட்டர்...
இந்தச் செய்தி பல பாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செய்தி வெளியானதிலிருந்து ட்விட்டரில் Maratha Mandir என்ற வார்த்தை ட்ரெண்டிங்கில் உள்ளது.

மாபெரும் வெற்றிப்படம்...
1009 வாரங்கள் ஓடினாலும், வார நாட்களில் கணிசமான கூட்டத்தையும், வார இறுதியில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவும் 'தில்வாலே' ஓடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











