என்னுள் ஆயிரம்: மகனுக்காக தயாரிப்பாளராகிய டெல்லி கணேஷ்
சென்னை: புதுமுகங்கள் மகாதேவன் - மெரீனா மைக்கேல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னுள் ஆயிரம். இந்தப் படத்தின் மூலம் தனது மகன் மகாவை நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்கிறார் நடிகர் டெல்லி கணேஷ்.
இந்தப் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் டெல்லி கணேஷ் படம் குறித்து பேசும்போது " இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக இருந்த கிருஷ்ணகுமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

கிருஷ்ணகுமார் நேராக என்னைத் தேடி வராமல் எனது மகனிடம் கதையை சொல்ல கதை அவருக்கு பிடித்து விட்டது. பிறகு மகா வந்து என்னிடம் சொன்னார் எனக்கும் கதை பிடித்திருந்தது.
இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர்களை தேடி அலைந்து கொண்டிருந்த போது, உங்கள் மகனை வைத்து படம் தயாரிக்கும் நீங்களே ஏன் இந்தப் படத்தை இயக்கக் கூடாது என்று மற்றவர்கள் கேட்டனர்.
அதனால் நானே இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். படத்தின் கதையும், மகாவின் நடிப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
கண்ணியமான தயாரிப்பாளர் என்ற பெயரை நான் வாங்கிவிட்டேன், என்னை வெற்றித் தயாரிப்பாளராக மாற்ற வேண்டியது மக்களின் கைகளில் தான் உள்ளது.
நான் முதலில் நாடகத்தில் நடிக்கும் போது என்னிடம் இயக்குனர் சொன்ன வார்த்தைகளைத் தான் நான் என் மகனிடம் கூறினேன். அதாவது நீ முதலில் ஒரு நல்ல மனிதனாக இரு, பின்னர் நல்ல நடிகனாக மாறலாம்" இவ்வாறு படத்தின் தயாரிப்பாளர் டெல்லி கணேஷ் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் மகா ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்பவராக நடித்திருக்கிறார். ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் சார்பில் டெல்லி கணேஷ் தயாரித்த இப்படத்திற்கு நா. முத்துக்குமார் பாடல்கள் எழுத கோபி சுந்தர் (அறிமுகம்) இசையமைத்திருக்கிறார்.
காதலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் என்னுள் ஆயிரம் விரைவில் திரைகளைத் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











