சொத்து குவிப்பு வழக்கு: மாஜி சென்சார் போர்டு அதிகாரி ராஜசேகருக்கு 2 ஆண்டு, மனைவிக்கு 1 ஆண்டு சிறை!!
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்சார் போர்டு முன்னாள் மண்டல அலுவலரான ராஜசேகருக்கு 2 ஆண்டுகளும் அவரது மனைவி யோகலட்சுமிக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2010-ம் ஆண்டு தமிழக அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி கதாநாயகனாக நடித்த படம் காதல் சொல்ல வந்தேன். அப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக சென்சார் போர்டு அதிகாரி ராஜசேகரை சிபிஐ கையும் களவுமாக கைது செய்தது.

பின்னர் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் ராஜசேகர் மனைவி யோகலட்சுமியும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இருவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ராஜசேகருக்கு 2 ஆண்டுகளும், அவரது மனைவி யோகலட்சுமிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ராஜசேகரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த ராஜசேகர் எம்.எஸ்.சி அக்ரி படித்தவர். பின் ஐ.எப்.எஸ். முடித்து பஞ்சாப் கேடரில் பணியாற்றினார். ராஜசேகர் மனைவி யோகலட்சுமி கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தின் திருவள்ளூர் கிளையில் பேராசிரியையாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











