வாபஸ்..தருவதாக சொன்ன பணம் வரவில்லை..மாஜி அமைச்சர் மணிகண்டனின் வீட்டை முற்றுகையிட்ட நடிகை சாந்தினி
இராமநாதபுரம்: முன்னாள் அமைச்சர் மணிகண்டைன் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தன்னை கவனித்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததால் வழக்கை வாபஸ் வாங்கியதாக சாந்தினி தகவல்.
நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி தன்னை மணிகண்டன் கவனித்து கொள்ளவில்லை என துணை நடிகை சாந்தினி புகார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக துணை நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். மேலும், தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் சாந்தினி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் 8 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸார் விசாரணை
இதனைத் தொடர்ந்து 2021 ஜூன் 20ம் தேதி பெங்களூருவில் வைத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதால் உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. மேலும். இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர்.

மணிகண்டன் மீதான வழக்கு வாபஸ்
தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகை சாந்தினி சார்பில் புகார் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தன் மீதான புகழுக்கு களங்கம் விளைவித்ததாக மணிகண்டன் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும் என்று கண்டனம் தெரிவித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

மணிகண்டன் வீடு முற்றுகை
இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்து காரில் அனுப்பி வைத்தனர். அப்போது அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றியதாகவும், தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே வழக்கை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார். சொன்னபடி அவர் நடந்துகொள்ளவில்லை என்றும் தனக்கு பயந்து மணிகண்டன் தலைமறைவாக உள்ளார் எனவும் சாந்தினி தெரிவித்துள்ளார். எனக்கு சொன்னபடி அவர் பணம் தரவில்லை, அதுகுறித்து மணிகண்டனிடம் கேட்கவே வந்தேன் எனவும் கூறிச் சென்றார்.


Click it and Unblock the Notifications











