தமிழை நேசிப்பதால்தான் நான் பாஜக தலைவராக இருக்கிறேன்! - தமிழிசை
சென்னை: தமிழை நேசிப்பதால்தான் நான் தமிழக பாஜகவின் தலைவராக இருக்கிறேன் என்று டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
நேற்று மாலை 'எழுவாய் தமிழா' என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கா நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், இயக்குநர் டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர், ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தமிழிசை, "வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை டாடி மம்மி என்று அழைக்கும் ஆங்கில கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டும். எனது பெற்றோர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தால் எனக்கு தமிழிசை என்று பெயர் வைத்தார்கள். அப்போது என் பெயரை கேட்ட அனைவரும் திமுககாரர்களா நீங்கள் என்று கேட்டார்கள்.
தேசிய கட்சி என்பதாலேயே பாஜக தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழை நேசிப்பதால்தான் நான் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராகயிருக்கிறேனே ஒழிய, வேறு மொழிகளை நேசித்திருந்தால் வேறு மாநில நிர்வாகியாக இருந்திருப்பேன்.
எங்கள் பாஜகவின் ஆட்சி தமிழகத்தில் வந்தால், நாங்கள் தமிழைதான் ஆதரிப்போம். வேறு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டு வர மாட்டோம் என்றார். மேலும் நானும் ஒரு தமிழ் பெண், மருத்துவம் படித்தாலும் பாரதியின் நூல் படித்து தமிழ் கற்றவள்," என்றார்.
விழாவில் பேசிய ஒரிசா பாலு, "இந்தியாவை தவிர்த்து 48 நாட்டின் பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. எனவே தமிழ் மொழி அனைத்து நாடுகளும் மதிக்கும் இடத்தில்தான் உள்ளது நாம்தான் மறந்து விட்டோம்," ஆதங்கத்துடன்.
தமிழ் மொழிக்காக இப்படி ஒரு ஆல்பம் தயாரித்ததற்காக 'முகவை பிலிம்ஸ்' அங்கயற்கண்ணனை அனைவரும் பாராட்டினர். "தமிழுக்காக செலவு செய்வது என் பொற்றோருக்கு நான் செய்யும் கடமை போன்ற உணர்வு," என்றார் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன்.


Click it and Unblock the Notifications











