'நிலை மறந்தவன்’ஆக மாறிய ஃபஹத் ஃபாசில்...எதற்கு இந்த மாற்றம்?
சென்னை : புஷ்பா, விக்ரம் படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் தமிழ் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் தனது மனைவியுடன் இணைந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.
தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் 'நிலை மறந்தவன்'.மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரீஎன்ட்ரியாகும் நஸ்ரியா
ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மலையாள ரீமேக் படம்
ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் 'நிலை மறந்தவன்' என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

இது தான் படத்தின் கதையா
மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல். படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

விரைவில் டிரைலர் ரிலீஸ்
விரைவில் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஏப்-16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த படத்திற்கு ஜான்ஸன் விஜயன்- சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். சர்வம் கிருஷ்ணார்ப்பணம் (தமிழாக்கம்) வசனம் எழுதி உள்ளார்.


Click it and Unblock the Notifications











