காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் விக்ரம் பட பிரபலம்… ரெடியாகிறதா புதிய கூட்டணி?
பெங்களூரு: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா கன்னட திரையுலகையும் கடந்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து 400 கோடிக்கும் வசூலித்துள்ள காந்தாரா, இப்போது அமேசான் பிரைம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.
காந்தாரா படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, கார்த்தி உள்ளிட்ட பலர் ரிஷப் ஷெட்டியை பாராட்டி இருந்தனர்.

காந்தாரா ஹீரோவுக்கு பாராட்டு
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம், மொழி பாகுபாடின்றி பலதரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வெளியான இந்தப் படம், இதுவரை 400 கோடிக்கும் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் காந்தாரா, தற்போது அமேசானில் வெளியாகி, ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே ரிஷப் ஷெட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினி, கார்த்தி உள்ளிட்ட ஏராளாமன திரை பிரபலங்கள் பாராட்டியிருந்தனர்.

நேரில் சென்ற விக்ரம் பட பிரபலம்
இவர்களைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டியை மற்றுமொரு பிரபலமும் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் பாசில், இப்போது பான் இந்தியா ஸ்டாராக வெரைட்டி காட்டி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா, தமிழில் கமல் - லோகேஷ் கூட்டணியில் விக்ரம், இப்போது உதயநிதியின் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், காந்தாரா படத்தை பார்த்த ஃபஹத் பாசில், ரிஷப் ஷெட்டியை பாராட்டியுள்ளார். அப்போது ரிஷப் ஷெட்டி, ஃபஹத் பாசில், ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

ஹோம்பலே தயாரிப்பில் ஃபஹத்
ரிஷப் ஷெட்டி, ஃபஹத் பாசில் இருவருடனும் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள விஜய் கிரகந்தூர், இருவரையும் ரத்தினம் எனக் குறிப்பிட்டு, 'A Delightful evening with the two Gems!' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். ஒரு மாலை நேரத்தில் இரண்டு ரத்தினங்களுடன் மகிழ்ச்சியான பொழுது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போட்டோ ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே ஹோம்பலே தயாரிப்பில் ஃபஹத் பாசில் 'தூமம்' என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபஹத் பாசில் – ரிஷப் ஷெட்டி கூட்டணி?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் 'தூமம்' படத்தில் ஃபஹத் பாசிலுடன் அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார். 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்துக்கு பின்னர் இருவரும் இணையும் படம் தூமம் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா நடித்த 'யூ-டர்ன்' மூலம் கவனம் ஈர்த்த பவன் குமார், ஃபஹத் நடிக்கும் தூமம் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு சம்மரில் வெளியாகும் என ஹோம்பலே நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே, ஃபஹத் பாசிலும் ரிஷப் ஷெட்டியும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











