அச்சுஅசல் கையெழுத்துடன் அப்படி ஓர் அறிக்கை..அஜித் பெயரில் போலி கணக்கு.. சைபர் கிரைம் செல்கிறது டீம்!
சென்னை: நடிகர் அஜித்குமார் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் அஜித் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து ஹெச்.வினோத் இதை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹூமா குரேஸி
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இதில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார்.

ஷூட்டிங்கில் விபத்து
இந்த படத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. அப்போது இயக்குனர் உட்பட பலர் ரெஸ்ட் எடுக்குமாறு கூறியும் மறுத்துவிட்ட அஜித், காயத்துடனேயே நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் இப்போது தொடங்கியுள்ளது.

பேஸ்புக் கணக்கு
இந்நிலையில் அஜித் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு ஒன்று இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் அஜித்குமாரின் அறிக்கை போல ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், நான் பல வருடங்களுக்கு முன் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கி இருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பலமுறை நான் தெரிவித்திருந்தேன்.

உத்தியோகபூர்வ
இந்நிலையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம். மேலும் இதை காரணமாக வைத்து சமூக வலைத்தளங்களில் எனது ரசிகர்கள் எந்தவிதமான தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

சுரேஷ் சந்திரா
அதில் அஜித்குமாரின் கையெழுத்தும் உள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் இதில் இணைந்தனர். இந்நிலையில் இந்த பேஸ்புக் கணக்குப் பற்றி அஜித்தின் மானேஜர் சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோது அது போலியானது என்றார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் நாளை புகார் கொடுக்க இருக்கிறோம் என்றும் சொன்னார்.


Click it and Unblock the Notifications











