பான் வேர்ல்டுக்கு சென்ற கமல்ஹாசனின் விக்ரம்...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : இன்று ரிலீசான கமலின் விக்ரம் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். கமல் - லோகேஷ் கூட்டணியின் பிரம்மாண்ட வெற்றியை தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலக அளவில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று, வசூலை குவித்து, வசூலில் புதிய சாதனை படைத்தன. பிரம்மாண்டத்தின் உச்சம் என அதை புகழ்ந்து கொண்டிருக்கையில் யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் கன்னட சினிமாவான கேஜிஎஃப் 2 அசால்டாக அத்தனை சாதனைகளையும் அடித்து நொருக்கியது. பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இதெல்லாம் எப்பவோ பாத்துட்டோம்
பாகுபலி படத்தை எடுத்துக் கொண்டால் ராஜ குடும்பத்தில் பதவிக்காக நடக்கும் சதி, பங்காளி சண்டை தான் கதை. அதை ராஜமெளலி பிரம்மாண்டமாக சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதே போல் கேஜிஎஃப் கதையையும் எடுத்துக் கொண்டால், சாதாரண சிறுவன் எப்படி பெரிய டான் ஆகிறான், மக்களின் தலைவனாக தன்னை உருவாக்கி, அதை வைத்து இந்தியாவையே மிரள வைக்கிறான் என்பது தான் கதை. பல ஆண்டுகளுக்கு முன்பே கமலும், ரஜினியும் நடித்த நாயகன், பாட்ஷா படங்களும் கிட்டதட்ட இதே வகையை சேர்ந்தது தான்.

விமர்சிக்கப்பட்ட தமிழ் படங்கள்
மிக சாதாரண கதையை வைத்து தெலுங்கு படங்களும், கன்னட படமும் ஜெயித்துக் கொண்டிருக்கையில், பல தரமான நல்ல படங்கள் தமிழில் எடுக்கப்பட்டும் அவைகள் இந்திய சினிமா அளவிற்கு கூட பேசப்படவில்லை. சூரரைப் போற்று போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. தெலுங்கு, கன்னட படங்கள் ஜெயித்துக் கொண்டிருக்கையில் தமிழ் படங்கள் வளர வேண்டும், நல்ல டைரக்டர்கள் வர வேண்டும் என நம்ம ஆட்கள் பேசிக் கொண்டிருந்தனர். தமிழில் வந்த படங்களையும் விமர்சித்து வந்தனர். தமிழ் டைரக்டர்களுக்கு திறமையில்லையா என்று கூட பலர் கேட்டனர்.

பான் லேர்ல்ட் லெவலுக்கு போன கமல்
தெலுங்கு, கன்னட படங்களின் பிரம்மாண்டம், அதிரடி, பான் இந்தியா படங்கள் என்பவற்றை அடித்து நொருங்கி, விக்ரம் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவை பான் வேர்ல்ட் லெவலுக்கு கொண்டு சென்று விட்டார் கமல்ஹாசன். விக்ரம் படம் சர்வதேச லெவலில் இருக்கும் என்று சொன்ன போது முதலில் அனைவரும் பயந்தனர். தமிழில் ரிலீசாகும் ஒவ்வொரு பெரிய நடிகரின் படத்தையும் இப்படி தான் சொல்லி விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் அந்த படங்கள் ரிலீசான பிறகு தோல்வி அடைகின்றன அல்லது ரசிகர்களை கவர தவறி விடுகின்றன. அதே போல் விக்ரம் படத்தின் நிலைமையும் ஆகி விடக்கூடாது என கூறி வந்தனர்.

டைட்டிலிலேயே சொல்லிட்டாங்க
பான் இந்தியா என்று சொல்லி எடுக்கும் தமிழ் படங்கள் 200 கோடியை தாண்டுவதையே மிகப் பெரிய சாதனையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விக்ரம் படத்தின் ரிலீசிற்கு முன்பே, டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே 200 கோடி வசூலை பார்த்து விட்டது விக்ரம். இந்த படம் பான் வேர்ல்டு படம் என்பதை டைட்டிலிலேயே சொல்லி விட்டார்கள். உலகமே கமலின் கண்ணுக்குள் இருப்பதாக காட்டி உள்ளனர். படம் பார்த்த ஒவ்வொரு வரும் விக்ரம் படம் சர்வதேச லெவலில் உள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை கொஞ்சமும் கணிக்க முடியாமல் உள்ளதாக கூறி வருகின்றனர்.
Recommended Video

மீண்டும் நிரூபித்த கமல்ஹாசன்
ரிலீசுக்கு முன் ஆர்வத்தை தூண்டிய விக்ரம் படம், ரிலீசிற்கு பிறகு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக படம் பிரம்மாண்ட வெற்றி, வசூல் சாதனை என்பதை முதல் நாளிலேயே உறுதி செய்து விட்டது விக்ரம். நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்த கமல் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











