அண்ணாத்தக்கு இப்படி ஒரு சோதனையா...மாலில் ரஜினியை திணறடித்த ரசிகர்கள்
சென்னை : கூட்டம் கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி பொது இடங்களில் தோன்றுவதை தவிர்ப்பவர் ரஜினி. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதையும் ரஜினி விரும்ப மாட்டார்.
ரசிகர்கள் சுற்றிக் கொள்வதை தவிர்க்க தான் மகள் ஐஸ்வர்யாவின் அபார்ட்மென்ட்ஸ் வீட்டிற்கு அரிதாகவே செல்வார் ரஜினி. இதனால் தான் ரஜினியின் ஆலோசனைப்படி தான் தனுஷ், போயஸ் கார்டனில் இடம் வாங்கி பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார்.

ஆனால் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங், சென்னை வடபழனியில் இருக்கும் பிரபல ஷாப்பிங் மாலில் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதிக அளவில் கூட்டம் கூடாது என நினைத்து இங்கு படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.
படக்குழு நினைத்தது போல் ரஜினி, ஷாப்பிங் மாலுக்குள் நுழைகையில் பெரிதாக கூட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் ஷுட்டிங்கை முடித்து வெளியில் வந்த ரஜினியை பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் சுற்றிக் கொண்டது. ரஜினியுடன் செல்ஃபி, ஃபோட்டோ எடுக்க பலர் முண்டியடித்தனர்.
கூட்டத்தை சமாளிப்பதற்குள் படக்குழுவிற்கு போதும் போதும் என்றாகி விட்டது. ஒரு வழியாக கூட்டத்தில் இருந்து ரஜினியை மீட்டு, காரில் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர் படக்குழுவை சேர்ந்தவர்கள்.
சென்னையில் இன்றும், நாளையும் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங்கை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டது. அடுத்த வாரத்திற்குள் படப்பிடிப்பு முழுவதையும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகளை இந்த இரண்டு நாட்களில் எடுத்து முடித்து, மற்ற நடிகர் நடிகைகள் கொல்கத்தாவிற்கு செல்ல உள்ளனர்.
தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளதால் அதற்கு முன் முக்கியமான நாள் ஒன்றில் படத்தின் அடுத்த லுக், டீசர், டிரைலர் போன்றவற்றை ரிலீஸ் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











